பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விளம்பர வெற்றி

கிங்காங்-தாராசிங் என்ற மல்யுத்த வீரர்களை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். 1952-53-ல் தமிழகத்தில் மிகப் பரபரப்பாக அவர்களின் மல்யுத்தப்போட்டி நடைபெற்றது.

உலகத்தின் பல பாகங்களிலிருந்து மல்யுத்த வீரர்கள் வந்து ஒருவரோடு ஒருவர் மோதியிருக்கிறார்கள். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், பெங்களுர் முதலிய இடங்களில் மல்யுத்தம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அந்தச் சிறப்பில் எனக்கும் சிறப்பான பங்குண்டு. மல்யுத்தப் போட்டிக்கு விளம்பரம் செய்வதில் பல, புதுமைகளைப் புகுத்தினேன். மக்களின் ஆர்வத்தை மிகவும் தூண்டியதினால் தினம் தினம் பார்க்கப் பெருங்கூட்டமாக மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கவனித்த கிங்காங் என்னுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். என்னுடைய விளம்பரத் தோரணைகளும், மல்யுத்தம் பற்றி அரங்கத்தில் நகைச்சுவையாக ஒலி பெருக்கியில் விமர்சனம் செய்யும் விதமும் அவருக்கு ரொம்பவும் பிடித்தது.

கிங்காங் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் வசித்து வந்தார். அதனால் அவரும் நானும் மலாய் மொழியில் சரளமாய் பேசிக் கொள்வோம்.

“தமிழ்நாட்டில் மல்யுத்தப்போட்டி முடிந்ததும் பம்பாயில் நடைபெறப்போகிறது. கண்டிப்பாக அங்குவரவேண்டும்” என்று கிங்காங் சொன்னார். அதன்படி இரண்டு மாதம் கழித்து பம்பாய் போய்ச் சேர்ந்தேன்.