பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

189



பேசத் தெரியாதவர்களும், மக்களிடம் செல்வாக்கில்லாதவர்களும், தலைவர்களையே சுற்றி வந்தவர்களும் இச்சகம் பேசித்திரிபவர்களுக்கு மட்டுமே கட்சியில் பொறுப்பான பதவிகளும், ஆட்சியில் பொறுப்பும் கொடுக்கப்பட்டன.

எதிர் கட்சிகளுக்கு மண்டையில் அடித்தாற்போல் பதில் சொல்லத் தெரியாத மந்திரிகளும், செய்த சேவையை மக்களுக்குத் தோரணம் கட்டி விளம்பரப்படுத்திப் பேசத் தெரியாத கட்சித் தலைவர்களும், நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியை பலவீனமாக்கிக் கொண்டே வந்தார்கள்.

1967 தேர்தலில் ராஜாஜி அவர்கள் காமராஜ் அவர்களைப் பழிதீர்த்துக் கொள்ள திரு. அண்ணாதுரையை முன்னால் நிறுத்தி ஒரு விநோதமான கூட்டணியை உண்டாக்கி காங்கிரசை படுதோல்வி அடையச் செய்து தலைவர் காமராஜ் அவர்களையும் விருதுநகரில் தோற்கும்படி செய்தார்.

காமராஜ் தோற்று, காங்கிரசும் தோற்று, காங்கிரசின் பரமவைரியான தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இந்தத் தடவை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் தனக்கு இழைத்த அநீதியை மனதில் கொண்டு தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார்.

இதில் எனக்கு வருத்தமெல்லாம், திரு. ம.பொ.சி.அவர்கள் காங்கிரசை எதிர்த்து நின்றதைப் பற்றி அல்ல, ஆனால் காலமெல்லாம் ஆக்ரோஷமாக எதிர்த்த தி.மு.கவுடன் சேர்ந்து, அதுவும் உதய சூரியன் சின்னத்தில் நின்று ஒட்டுக்கேட்டதுதான்!

திரு. ம.பொ.சியின் அருமை பெருமையை திரு. காமராஜ் உணர்ந்து அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கவில்லை.