பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வடக்கு எல்லைப் போராட்டம்

1955-ம் ஆண்டு தலைவர் காமராஜ் முதன் மந்திரியாக இருந்தநேரம். தமிழரசுக் கழகத்தின் வடக்கெல்லைப்போராட்டம் மீண்டும் துவக்கப்பட்டது. என் தலைமையில் சுமார் 50 தோழர்கள் சத்யாக்கிரகம் செய்யப் புறப்பட்டோம். அப்போது சட்டசபை இப்போதைய கலைவாணர் அரங்கு இருக்கும் இடத்தில் நடந்துகொண்டிருந்தது. சட்டசபை வழிகளை எல்லாம் சுவர் வைத்ததுபோல போலீசார் அடைத்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கோ சட்டசபைக்குள் சத்தியாக்கிரகிகளுடன் போய் விடவேண்டும் என்ற எண்ணம், போலீஸ் வியூகத்தை உடைத்துக் கொண்டு எப்படிப் போவது என்ற சிந்தனையோடு சத்தியாக் கிரகிகளுடன் நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு வழி புலப்பட்டது.

எங்கள் போராட்டக்குழுவில் திருமதி. சரோஜினி நாராயணசாமியும் திரு .கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய மனைவியாரும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரையும் முன்னால் வரச்செய்து அவர்கள் தலைமை தாங்கிச் செல்வது போல ஏற்பாடு செய்தேன்.

இரு பெண்மணிகளும் முன்னால் செல்ல, நாங்கள் பின்னால் வந்து கொண்டிருந்தோம். போலீஸ்காவல் புரியும் கேட் அருகில் வந்ததும் திருமதி.சரோஜினியிடம் நிற்காமல் தயங்காமல் நடந்து செல்லுங்கள் என்று மெதுவாகக் கட்டளையிட்டேன்.

சொ.ந-13