பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

195



அவர் அந்தப் பக்கம் போனதும் போலீசார் எங்களை வளைத்துப் பிடித்து கைது செய்து வேனில் ஏற்றில் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுபோய் வைத்திருந்தார்கள்.

கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தியின் மனைவியாருக்கு இதெல்லாம் புதிய அனுபவம். கொஞ்சம் கலவரப்பட்டதுபோல இருந்தார்கள். நான் கு.சா.கி. அவர்களிடம் “எதுக்கய்யா மனைவியைக் கூட்டிக் கொண்டு வந்தீங்க? அவங்க ஜெயிலுக்குப் போகப் பயப்படுவாங்க போலிருக்கே” என்றேன்.

அவர் உடனே “இப்ப நான் கூட்டிக் கொண்டு வந்ததாலே தேச சம்பந்தமாக ஜெயிலுக்குப் போகப் போறா, வீட்டிலே விட்டு வந்திருந்தா கிரிமினல் சம்பந்தமா அடிதடி சண்டைக் கேசுக்காக ஜெயிலுக்கு வந்து நிற்பாளே” என்றார்.

“என்ன விஷயம்” என்றேன். அவர் சொன்ன விஷயம் ரொம்ப தமாஷாக இருந்தது. அதாவது அவருக்கு இரு மனைவிகள். இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம். ஒரு மனைவி மேல் மாடியில் வசிக்கிறார். இன்னொரு மனைவி கீழ் வீட்டில் வசிக்கிறார். தாங்கள் எங்கே வசிப்பது? என்று நடுவில் ஒரு கேள்வி போட்டேன்.

“நான் மாடிப்படியில்தான் வசிக்கிறேன், அதனாலே மேலே இருப்பவள் கீழ் வராமலும், கீழே இருப்பவள் மேலே போகாமலும் தடுத்துக் கொண்டிருக்கிற சக்தி நான்தான். விஷயம் இப்படி இருக்கிறபோது நான் மட்டும் போராட்டத்திற்கு வந்து விட்டால் மேலே இருக்கிறவள் கீழே வர, கீழே இருக்கிறவள் மேலே போக, கடைசியில் அடிதடி சண்டைக் கேசில் ஜெயிலுக்குத் தானே வரவேண்டும். அதனால்தான் ஒருத்தியை என்னுடன் கூட்டிக் கொண்டு வந்துவிட்டேன் என்றார்.”

எல்லோரும் தாமாஷாகச் சிரித்தோம். ஜெயிலுக்கு வந்தவர்களை மனம் தளராமல் கவிஞர் கு.சா.கி. இப்படி