பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சொன்னால் நம்பமாட்டீர்கள்


மாணவர்களுக்கு மத்தியில் ஒரு இந்திய மாணவனான நான் நிற்பதைக் கவனித்து விட்டார்.

மாணவர்களை போலீஸ் வேனில் ஏற்றினார்கள். என்னைக் கவனித்த சீக்கிய போலீஸ்காரர் ஒவ்வொரு மாணவராக போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார் நான் வேன் அருகில் வந்ததும் அதிகாரிக்குத் தெரியாமல் சடக்கென்று என்னை வெளியே இழுத்து வேறு பக்கம் தள்ளி விட்டார்.

நான் வெகு தூரம் போய் விழுந்தேன். அதனால் நான் போலீசாரிடமிருந்து தப்பி விட்டேன். ஆனால் என் தாய் மாமனிடம் தப்ப முடியவில்லை. போலீஸ் அடியைவிடபலமான அடி அன்று கிடைத்தது.

சொன்னால் நம்பமாட்டீர்கள், அன்று மாலை மேற்படி சீக்கியபோலீஸ்காரர் என்னைத் தேடி வந்தார். எனக்கு ஒரே திகிலாக இருந்தது.

அவர் என்னைக் கூட்டிக் கொண்டு போய் ஒரு டீ கடையில் டீ வாங்கிக் கொடுத்து ‘பகத்சிங்’ படம் போட்ட பாட்ஜ் ஒன்றை என் சட்டையில் மாட்டி விட்டு பகத்சிங்கின் வீரம் தீரம் தியாகம் இவைகளைப் பற்றி எனக்குச் சொல்லி நானும் பகத்சிங் போல இந்திய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட வேண்டும் என்று கூறி விடைபெற்றுக்கொண்டு சென்றார்.

அன்றிலிருந்து பகத்சிங் போல புரட்சி வீரனாக வேண்டுமென்ற எண்ணம் மனதில் புயலடிக்க ஆரம்பித்தது. சிறு வயதில் நெஞ்சில் ஏற்பட்ட அந்த வேகம்தான் 1942-ல் பெரும்புயலாக மாறி தேவகோட்டை திருவாடானை பகுதிகளில் புரட்சியாக வெடித்தது.