பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெரியார் தந்த பத்து ரூபாய்

பெரியார், ஈ.வெ.ரா. அவர்களை மிகவும் தாக்கிப் பேசுவது என் சுபாவம். சொல்லப் போனால் என் அளவு தாக்கிப் பேசுபவர் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம், இருந்தாலும் பெரியாரின் தைரியத்தைக் கண்டு அவரிடம் எனக்குத் தனி மரியாதை உண்டு.

ஒரு சமயம் திருச்சிக்குப் போயிருந்தபோது பெரியாரைப் பார்க்கப்போனேன். அதுதான் முதன் முன்ற நான் அவரைச் சந்திப்பது.

என்னைக் கண்டதும் அந்தத் தள்ளாத வயதிலும் எழுந்து நின்று அன்புடன் வரவேற்று உபசாரம் செய்தார்.

”நான் உங்களை அதிகமாகத் தாக்கிப் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறேன். மன்னிக்க வேண்டும்,” என்று கூறினேன்.

“இதுக்கு எதுக்கு மன்னிப்பு?” உங்க எண்ணத்தை நீங்க சொல்றீங்க. எதாயிருந்தாலும் பயப்படாம சொல்லுங்கள். ஆமா. கதையெல்லாம் சொல்லிப் பேசுவீங்களாமே?” என்று பெரியார் கேட்டார்.

”ஏதோ சில கதைகள், பேசும்போது தானாக வரும், நான் அதிகம் படித்தவன் அல்ல,” என்றேன்.

“எனக்குக் கூட அந்தப்பாணி ரொம்பப் பிடிக்கும். ரொம்ப படிச்சவன் மனசு திறந்து பேசமாட்டான். உங்க பேச்சைநான் ஒரு நாள் கேட்கனுமே” என்றார்.