பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிஞர் அண்ணாவுடன்

திருச்சியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு சென்னைக்கு ரயில் ஏற ஜங்ஷனுக்கு வந்தேன். முதல் வகுப்பு டிக்கட் கையிலிருந்தாலும் அந்த வண்டியிலே இடமில்லாமல் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு போலீஸ் ஆபீஸர் என் முன்னால் வந்து “உங்களை சி.எம். கூப்பிடுகிறார்” என்றார்.

“யார் திரு. அண்ணாதுரை அவர்களா?” என்றேன்.

“ஆம்” என்றார்.

‘சரி’ என்று அவரைப் பின்பற்றி அண்ணா இருந்த கம்பார்ட்மெண்ட்டுக்குப் போனேன். அண்ணா என்னை அன்புடன் வரவேற்று, “சென்னைக்குத் தானே” என்றார்.

“ஆம்” என்றேன்.

“என்னுடனே பிரயாணம் செய்வதில் ஆட்சேபமில்லையே?” என்றார்.

“ஆட்சேபமில்லை; ஆனால் தங்களுக்கு அசெளகரியமாக இருக்குமே” என்றேன்.

“எனக்கு ஒரு அசெளகரியமுமில்லை. சொல்லப் போனால் உங்களுக்குத்தான் அசெளகரியமாக இருக்கும்” என்றார்.

“எனக்கென்ன அசெளகரியம்?” என்றேன்.நான்.

“சீக்கிரத்தில் தூங்கவிடாமல் வெகுநேரம் நான் பேசிக் கொண்டிருப்பேனே” என்றார்.