நான் எழுத்தாளனானதற்கு ஒரு பால்காரப் பையன்தான் காரணமாவான். அவன் பெயர் கருப்பையா.
1942ஆகஸ்ட் போராட்டத்தின்போது நான் தேவகோட்டை போலீஸ் சிறையில் சில நாட்கள் தனிமைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தேன்.
போலீஸ் சிறையில் (லாக்-அப்) 24 மணி நேரத்திற்குமேல் சட்டப்படி வைக்கக்கூடாது. ஆனால் சட்ட விரோதமாகப் போலீசார் ஏதோ காரணமாக என்னை வைத்திருந்தார்கள். அதனால் என் சாப்பாடு துணிமணி முதலியவற்றிற்கு சட்டப்படி போலீசார் செலவு செய்ய முடியாதாகையால் எனக்கு வீட்டிலிருந்து சாப்பாடு துணிமணி கொண்டுவர அனுமதியளித்திருந்தனர்.
அப்படித் தினமும் எனக்குச் சாப்பாடு கொண்டு வந்தவன்தான் பால்கார கருப்பையா!
இளைஞன், 15 வயதிருக்கும். நல்ல கருப்பு. சுருள் சுருளான தலைமுடி எப்போதும் சிரித்த முகமாக இருப்பான்.
எனக்கும் அப்போது வயது 22. நல்ல வாலிப முறுக்கு.
ஒருநாள் சாப்பாடு கொண்டு வந்தபோது கருப்பையா ஒரு கடிதத்தை என்னிடம் நீட்டினான்.
என்னவென்று கேட்டேன். “ஒரு பொண்ணு ஆசையா லெட்டர் கொடுத்திருக்கு” என்றான்.