பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

237



“எனக்கா? யாரது?” என்று கேட்டேன்.

“மெய்யம்மை என்று பெயர். ஒங்கமேலே ரொம்ப ஆசையா இருக்குது. வயது 17 இருக்கும் பொண்ணு ரொம்ப சிவப்பு” என்று சொன்னான்.

“அப்படியா” என்று சொல்லி கடிதத்தை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தேன்.

மெய்யம்மையின் கையெழுத்து குண்டு குண்டாக அழகாக இருந்தது. அவள் கடிதம் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தாள்.

என் உள்ளம் கவர்ந்த அன்பருக்கு எழுதியது. என்னை நீங்கள் பார்த்திருக்க முடியாது. நான் உங்களைப் பார்த்திருக்கிறேன். கண் குளிரப் பார்த்திருக்கிறேன்.

தங்கள் பேச்சைக் கேட்டு மயங்கியிருக்கிறேன். தாங்கள் சிறையில் தவம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நானும் சிறைக்கு வரவேண்டுமென்று துடிக்கிறேன்.

நான் பெண் ஜென்மம். என் இஷ்டப்படி செல்ல பெற்றோர்கள் என்னை அனுமதிக்க மாட்டார்கள்.

எப்போதும் உங்கள் ஏக்கமாகவே இருக்கிறேன். தாங்கள் விடுதலையாகும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அப்போது தானே உங்களைக் கட்டி அணைக்க முடியும். கடவுளை வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம். மறக்காமல் பதில் எழுதி கருப்பையாவிடம் கொடுத்தனுப்பவும். கடிதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள்,

மெய்யம்மை