பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சொன்னால் நம்பமாட்டீர்கள்



மேடையில் வந்துநின்றேன். கைகால் உதற, கண்கள் சுழல, நாக்கு குளறியது. ஆயினும் எப்படியோ சமாளித்து, நான் மனப்பாடம் செய்து வைத்திருந்த ஆனந்தவிகடன் தலையங்கத்தைப் பேச ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் கை தட்டுதலும், சிரிப்பொலிகளும் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.

பின்னர் வெகுநிதானமாகவும், குழப்பமில்லாமலும் பேசி முடித்தேன். எல்லோரும் அசந்து போனார்கள். செல்வத்தைப் பற்றி இவ்வளவு அழகாக ஒரு சிறுவனால் எப்படிப் பேச முடிந்தது என்று ஆசிரியர்களும் தலைமை வகித்தவரும் வியப்படைந்தார்கள். தலைமை வகித்த வக்கீல் திரு. ராமசாமி அய்யங்கார் அவர்கள், என்னைத் திருஞான சம்பந்தருக்கு ஒப்பிட்டுப் பேசிப் பாராட்டினார்.

விஷயம் மனப்பாடம் என்பது அவருக்குத் தெரியாதல்லாவா? அன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஆனந்த விகடனை வாங்கி ஒன்று விடாமல் படிப்பதை வழக்கமாக்கிக்கொண்டேன். பல தலையங்கங்களை மனப்பாடம் செய்துகொண்டேன்.

பின்னர் கேட்பானேன்! சங்கங்கள், வாசகசாலைகள், பொதுக்கூட்டங்கள் என்று சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தேன். குரல் மட்டும் என்னுடையதுதான். விஷயம் அனைத்தும் கல்கி எழுதியதாகத்தான் இருக்கும்.