பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

51


நந்திக் கலம்பகம் ஆசிரியர் பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியார், முத்தொள்ளாயிரம் ஆசிரியர் திருப்பாப் புலியூர் ஞானியார் சுவாமிகள், குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் முதலிய அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து அவர்களின் கவிதைகளை அனுபவிக்கும்படி இதய ஒலி செய்தது.

இதய ஒலியில் உள்ள சங்கீதமும் சாகித்யமும், என்ற கட்டுரையைப் படித்த பிறகு உண்டான ஆவேசம்தான் என்னைத் தேவகோட்டையில் ஒரு தமிழிசை மாநாடு நடத்தும்படி தூண்டியது. தமிழிசைக் கிளர்ச்சிக்கே அந்தக் கட்டுரை தூண்டுகோலாகவும் அமைந்தது.

இப்படிப்பட்ட அற்புதமான காரியங்களைச் செய்த இதய ஒலியின் இரண்டாம் பதிப்பை வெளியிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த இரண்டாம் பதிப்பை வெளியிடுவதற்காகத் திருத்திக் கொடுக்கப்பட்ட புத்தகம் நான் காரைக்குடி திரு சா.கணேசன் அவர்கள் வீட்டிலிருந்து அமுக்கிக் கொண்டு வந்த அதே புத்தகம் என்பதுதான்.

இதய ஒலியைச் சொல்லாமல் எடுத்துக் கொண்டு வந்த குற்றத்திற்குப் பரிகாரமாக நானே ஆயிரக்கணக்கான புத்தகம் போட்டு விநியோகம் செய்யும்படி ஏற்பட்டது எல்லா வற்றையும்விட அதிசயமான விஷயமாகும்.