பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சொன்னால் நம்பமாட்டீர்கள்


சொல்லி சுமார் இரண்டு மணி நேரம் தமிழிசையை முழக்கிச் சபையை மெய்மறக்கச் செய்தார்.

கச்சேரி முடிந்ததும் நான் அவர் அருகில் சென்று நன்றி சொன்னேன். அரியக்குடி என்னைப் பார்த்து, “இசைக்கு மொழி அவசியமா?” என்று கேட்டார் “அவசியம்தான்,” என்றேன்.

“எதனால்?” என்றார்.

நம் முன்னோர்கள் இசையில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே, என்றேன். “எப்படி” என்றார். இசைதான் முக்கியம் என்றால் நம் முன்னோர்கள் வாய்ப்பாட்டுக்காரர்களை நடுவில் வைப்பார்களா? ஒரு சாதாரண வித்வான் பாடினாலும் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு மணி போன்ற பெரியவர்கள் பக்க வாத்திய மாகத்தானே உட்காருகிறார்கள்? இசைதான் முக்கியம்; மொழி முக்கியம் இல்லை என்றால் ராஜமாணிக்கம் பிள்ளையைத் தானே நடுவில் வைக்க வேண்டும். இதிலிருந்தே மொழி முக்கியமென்று தெரியவில்லையா என்றேன்.

அரியக்குடி அன்றிலிருந்து தமிழ்ப்பாட்டு நிறையப் பாட ஆரம்பித்தார். இந்தச் சம்பவத்தை ஒரு சபையில் ராஜா சர் அண்ணாலை செட்டியார் அவர்களிடம் அரியக்குடியே சொன்னார். உடனே ராஜா சர் அகமகிழ்ந்து அப்போதே எனக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தார்.