பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

95



தமிழ்ப்பண்ணைக்கு அடிக்கடி புத்தகம் வாங்க வருவார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். அவருடன் நெருங்கிய பழக்கம் எனக்கு அப்பொழுதுதான் ஏற்பட்டது.

தமிழ்ப்பண்ணை புத்தகப் பதிப்பகத்திற்கு எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் வருவார்கள். தவறாமல் வ.ரா., புதுமைப் பித்தன், தி.ஜ.ர. முதலியவர்கள் வருவார்கள். வ.ரா. சத்தம் போட்டுத்தான் பேசுவார். யாரும் அவருக்கு நிகரில்லை. புதுமைப் பித்தனோ ரொம்பக் கிண்டலாகப் பேசுவார். தி.ஜ.ர. எதுவும் பேசமாட்டார். அப்படிப் பேசினாலும் ரொம்ப மெதுவாகப் பேசுவார்.

ஒருநாள் நான் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது வ.ரா. வந்தார். “என்னடா எழுதுகிறாய்” என்று கேட்டார். “ஒரு பிரயாணக் கட்டுரை எழுதுகிறேன்” என்றேன். “கொடு பார்ககலாம்” என்றார். கொடுத்தேன். “டேய்!” நீ பெரிய ஆளுடா, என்னமா எழுதியிருக்கிறாய்” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தபோது தி.ஜ.ர. வந்து விட்டார். “பார்த்தியா, இதைப் பார்த்தியா” என்று தி.ஜ.ர.விடம் நான் எழுதியதைக் காட்டி வ.ரா.புகழ ஆரம்பித்தார்.

தி.ஜ.ர. அதைப் படித்துப் பார்த்து, “நன்றாகத்தான் இருக்கிறது” என்றார். “சும்மா சொல்லி விட்டுப் போகாதே. ‘சக்தி’ பத்திரிகையில் இவனிடம் கட்டுரை வாங்கிப் போடு” என்று வ.ரா. சொன்னார். எனக்கு மெய் சிலிர்த்தது. அவர் பெரிய எழுத்தாளர் மட்டுமல்ல, பெரிய மனது உடையவர், நான் எழுதிய அந்தக் கட்டுரையின் ஆரம்பம் இது தான்.

“கட்டுரையாகட்டும் கதையாகட்டும்” வேகமாகவும்

விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டுமென்று அறிஞர்கள்