பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி விண்ணகர்த் திருப்பதிபற்றிய இத்திருமொழி முடிந்தவுடனே பத்துத் திருமொழிகளால் 100 பாசுரங்களால் திருநறையூரை அநுபவிக்கப் போகின்றார் ஆழ்வார். ஆற்றில் பெருவெள்ளம் வரப் போவதற்கு முன்னே ஆறு பொசிந்து காட்டுவது வழக்கம். அது போல 100 பாசுரங்களால் திருநறையூர்த் திருப்பதி அநுபவமாகின்ற பெருவெள்ளம் அண்மையில் இருப்பதனால் அதற்கு முன்னடையாளமாகத் 'திருநிறையூர்த் தேனே' என்று இவ்வாறு பொசிந்து காட்டுகின்றது என்பதாம். பேருந்து கோயிலருகில் நின்றதும், இறங்கிக் கோயிலை நோக்கி நடக்கின்றோம். பேருந்தில் வருங்கால் திருநறையூரின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்துக் கொண்டே வந்தோம். அக்காட்சிகள் ஆழ்வார்தம் பாசுரங்களிலும் குறிப்பிட்டுள்ளதைச் சிந்திக்கின்றோம். நறையூரை அடுத்துள்ள சோலையைப் பற்றி ஆழ்வார் கூறுவார்; சோலையோ நறவு ஆர் பொழில் சோலை’ (7. 1:1) யாகவும் நறைசேர் பொழில்’ (6. 4:10) ஆகவும் காட்சி தருகின்றது. தேமாவின் செந்தளிர்களைக் குயில்கள் கோதிக் கூவும் (6.5.2); அவ்விடத்தின் நிலப்பண்பாலே மீன்கள் மிகவும் பருந்திருக்கும்; அவற்றைப் பிடிக்கின்ற உழவர்கள் இரண்டு கையாலும் அவற்றைத் தழுவுவார்கள்; மிக்க வலிவுள்ளவை யாதலால், அவை பிடிப்பவர்களை உதறித் தள்ளி விட்டுப் போய் விடும்; அங்ங்னம் தள்ளப்பெற்று விழுந்த உழவர்கள் மீண்டும் அவற்றைப் பிடிக்க எழுந்திருப்பார்கள்; இதைக் கண்ட ஆமை அஞ்சி வரம்பிலே நின்ற மஞ்சள் புதரிலே புகுந்து மறையும் (6.6:3); அவ்விடத்தில் எழில் மிக்க மயில்கள் நடனமாட, அதற்கேற்ப வண்டுகள் இசைபாடும் (6.5:4). அங்குள்ள மரத்தின் பொந்துகளில் வாழும் குஞ்சுக்காக இரை தேடும் பறவைகள் நத்தைகளைத் திரட்டிக் கொண்டு செல்லும் (6.5:7); மீன்களை மிகுதியாகப் பிடித்துண்ணும் கொக்குகள் தம் பேடைகளுடன் ஒடிச் சென்று தாமரைப் பூவினுள் தேனைப் பருகா நிற்கும் (6.5:8); இன்னும் இச்சோலையில் வண்டுகள் அப்போதலர்ந்த செண்பக மலர்களின் நறுமண மிக்க தேனையுண்டு மகிழம் பூவின்மீது தங்கியிருக்கும் (6.6:1); அன்னப் பறவைகள் தம் பேடைகளோடு கூடி அங்குள்ள மகளிரின் நடையழகைக் கண்டு தாமும் அப்படியே நடக்க விரும்பும்; அந்த நடை தமக்கு