பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியத்திலும் நன்கு சுவைக்கலாம். மேலும், சைவ புராணங்களிலும், சைவத்தல புராணங்களிலும் சேக்கிழாரைப் பற்றிய தோத்திரங்கள் பல காணப்படுகின்றன. சேக்கிழாரைப் பற்றித் திரு. சோமசுந்தர தேசிகர் அவர்கள் சைவ சிகாமணிகள் இருவர் என்ற நூலில் உரை நடையில் வரைந்துள்ளார். திரு கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் சேக்கிழார் சுவாமிகள் சரித்திரம் என்ற நூலையும், திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் சேக்கிழார் என்ற நூலையும் இயற்றித் தந்துள்ளனர். டாக்டர் திரு மு. இராசமாணிக்கனார் அவர்கள் பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலிலும், திரு மு. இராகவையங்கார் அவர்கள் சாசனத் தமிழ்க் கவி சரிதம் என்ற நூலிலும், திரு. தி. கி. நாராயணசாமி நாயுடு அவர்கள் பெரிய புராணம் சமாஜப் பதிப்பிலும், சேக்கிழார் காலத்தை ஆய்ந்துள்ளனர்.

முடிப்புரை

”தாங்கும் வளவன் அநபாயன்
தங்கள் மணியாய் அவனமைச்சர்
தங்கள் சூளா மணியாயுத்
தமச்சோ ழப்பல் லவன்எனும்பேர்
ஓங்கும் படிகொள் விண்மணியாய்
உவக்கும் அடியார் சரித்திரமுற்(று)
உரை செய்து அருள் சிந்தாமணியாய்”

விளங்கும் சேக்கிழார் பெருமானின் மா புராணமாகிய திருத்தொண்டர் புராணத்தை மக்கள் ஓதி யுய்க!