பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பார்த்திவேந்திரபன்மன்[1]

பார்த்திவேந்திரபன்மன் யார் ?

தென்னாற்காடு, வடஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் பார்த்திவேந்திரபன்மன் கல்லெழுத்துக்கள் காணப்பெறுகின்றன. இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழனுக்கு (957-970) ஆதித்த கரிகாலன் (ஆதித்தன் 11) என்ற ஒரு மகன் இருந்தான். இவ் ஆதித்த கரிகாலனுடைய கல்வெட்டுக்களையும், பார்த்திவேந்திரபன்மனுடைய கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து திரு. H. கிருஷ்ணசாஸ்திரி அவர்கள் இருவரும் ஒருவரேயாதல் கூடும் என்று முடிவுகட்டினர். அதனேயே தாமும் ஏற்றுக்கொண்டு திரு. K. A. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் சுருக்கம்[2] பின் வருமாறு :-

இவ்விருவரும் ”வீரபாண்டியன் தலை கொண்டவர்கள்” என்று கூறப்பெறுகின்றனர். இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனுடன் போரிட்ட வீரபாண்டியனே இவர்களால் வெல்லப்பட்ட வீரபாண்டியனாதல் ஏற்புடைத்து. இருவரும் பரகேசரி எனப்பெறுகின்றனர். ஆதித்த கரிகாலன் கல்லெழுத்துக்கள் மிகச் சிலவே. அவை தாமும் தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு மாவட்டங்களில் உள்ளன; 5-ஆவது ஆண்டுக்கு மேலும் காணப்பெறவில்லை. பார்த்திவேந்திரபன்மனுடைய கல்லெழுத்துக்கள் பல தொண்டை மண்டலத்திலுள்ளன;


  1. இது ஞானசம்பந்தத்தில் வெளிவந்தது.
  2. K. A. N. COLAS - Part I-Pages 178 and 179.