பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நெற்குன்றங் கிழார்

முதற் குலோத்துங்கன் காலத்துப் புலவர்கள்

முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் ஆசிரியர் செயங்கொண்டார் வாழ்ந்து கலிங்கத்துப் பரணி பாடியமை யாவரும் அறிந்ததே. இச் செயங்கொண்டார் காலத்தில் கவிகுமுத சந்திர பண்டிதராகிய திருநாராயண பட்டர், நெற்குன்றங்கிழார் களப்பாள ராயர், வீரைப் பரசமய கோளரிமாமுனி, மருதூருடையான் குன்றன் திருச்சிற்றம்பல முடையான் முதலிய புலவர்கள் வாழ்ந்தனரென்று வரலாற்று ஆசிரியர்கள் பகர்வர். அன்னோருள் நெற்குன்றங்கிழார் களப்பாளராயர் முதற் குலோத்துங்கன் காலத்திலும், விக்கிரம சோழன் காலத்தில் சில ஆண்டுகளும் வாழ்ந்தவராகக் கருதப் பெறுகிறார்.

அரசியல் அலுவலர்

நெற்குன்றங்கிழார் தொண்டை மண்டலத்தில் புலியூர்க்கோட்டத்துப் போரூர் நாட்டிலுள்ள நெற்குன்றம் என்ற ஊரில் வாழ்ந்த ஓர் அரசியல் தலைவராவர். இவருக்குக் கருவுணாயகர் என்பது இயற்பெயர். நெற் குன்றம் என்ற வூரைக் காணியாகக் கொண்டமையின் நெற்குன்றங் கிழார் என வழங்கப் பெற்றார் ; வேளாண் மரபினராதலின் களப்பாளராயர் எனப் பெற்றார்.

புலவர்களை வாழ்வித்தமை

ஒட்டக்கூத்தர் இவருடைய முதுமைப் பருவத்தில் வாழ்ந்தவராகத் தெரியவருகிறது. ஒட்டக் கூத்தர் புலவர்கள் பலராகப் பெருகிவந்ததைச் சிறிதும் பொறுக்காது செய்த செயலை,