டாக்டர். மா. இராசமாணிக்கனார்
217
1029-இல் இறந்தான். இப்போரினால் ஈழநாடு முற்றிலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டு விட்டது. இராசேந்திரன் கல்வெட்டுகள் இலங்கையிற் கிடைத்துள்ளன.[1]
சோழ நாட்டில் இறந்த மஹிந்தனது மகன் மறைவாக ஈழத்தவரால் வளர்க்கப்பட்டான். அவன் தன் தந்தை சோணாட்டில் மடிந்ததைக் கேட்டு, ரோஹணப் பகுதிக்குத் தானே அரசனாகி, முதலாம் விக்கிரமபாகு என்னும் பெயருடன் கி.பி. 1029 முதல் 1041 வரை ஆண்டுவரலானான்.[2]
தென்னாட்டுப் போர் : பாண்டியநாடு இராசராசன் காலத்திற்றானே அடிமைப்பட்டுவிட்டது. அப்படி இருந்தும், ‘இராசேந்திரன் அங்குச் சென்று பாண்டியனைத் தோற்கடித்து விரட்டி, அந்நாட்டை ஆளத் தன் மகனான சுந்தர சோழனை நிலைநிறுத்தி மீண்டான். பிறகு பரசுராமனது சேர நாட்டைக் கைக்கொள்ளப் பெரும்படையுடன் மலையைத் தாண்டிச் சென்றான்; அங்கு இருந்த அரசருடன் போர் செய்து வென்றான்; கிடைத்த நிதிக்குவியல்களுடன் தன் நாடு திரும்பினான்’ என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன. இதனுடன் இராசேந்திரனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் ஸ்ரீ வள்ளுவர் என்னும் பெயர்கொண்ட ஸ்ரீ வல்லப பாண்டியன் மனைவி திருவிசலூர்க்கோவிலுக்கு நிவந்தம் கொடுத்தாள்[3] என்பதையும் இராசேந்திரன் மதுரையில் பெரிய அரண்மனை ஒன்றைக் கட்டினான்[4] என்பதையும் நோக்க, சோழர் ஆட்சியில் இருந்தபோதிலும், பாண்டியர் தலைமறைவாகப் பாண்டிய நாட்டில் இருந்து கொண்டே கலகம் விளைத்தனரோ என்பது எண்ண வேண்டுவதாக இருக்கிறது. இராசேந்திரன், இராசராசனைப் போலக் காந்தளூர்ச் சாலையில் கலம்