பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

109


அற்புதங்கள் விளைவிக்க வல்ல அதே நிக்கொலஸை நினைத்துத் தான் இப்பொழுது அவன் பிராத்தனை புரிந்தான். நன்றி அறிவிப்பு ஆராதனை நடத்தி, கொஞ்சம் மெழுகு வர்த்திகளை ஏற்றி வைப்பதாக அவன் வேண்டிக்கொண்டான். என்றாலும், அந்த விக்கிரகம், அதன் சட்டம், மெழுகு வர்த்திகள், பாதிரி, நன்றி அறிவிப்பு ஆராதனை எல்லாம் கோயிலில் முக்கியமானவை. அவசியமானவைதான். ஆனால் இந்த இடத்தில் அவனுக்காக அவை எதையும் சாதித்து விட முடியாது. அம் மெழுகுவர்த்திகள், ஆராதனைகள் முதலியவற்றிற்கும் அவனது தற்போதைய அபாயகரமான ஆபத்து நிலைமைக்கும் எந்த விதமான தொடர்பும் இருக்க முடியாது என்பதை அவன் தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் உணர்ந்தான்.

‘நான் கவலையுற்று ஏங்கக்கூடாது. தடத்தை பனி மூடி மறைத்து விடுவதற்கு முன்பே நான் குதிரையின் அடிச்சுவடுகளைப் பின் பற்றிச் செல்ல வேண்டும். குதிரை என்னை வெளியே கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். ஒருவேளை அதை நான் பிடித்து விடவும் கூடும். நான் அவசரப்படக் கூடாது. அது தான் முக்கியம். இல்லை யெனில் நான் இன்னும் அதிகமாக அமிழ்ந்து அடியோடு நாசமாகிவிடுவேன்’ என்று அவன் எண்ணினான்.

ஆனால், அமைதியாக நடக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்ட போதிலும் அவன் முன்னோக்கிப் பாயவே செய்தான். சில சமயம் ஓடவும் முயன்றான். அதனால் அடிக்கடி விழுந்தான். எழுந்தான். திரும்பத் திரும்ப விழுவதும் எழுவதுமாக