பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

டால்ஸ்டாய் கதைகள்

இருந்தபொழுது, அவனது கனவுகள் மீண்டும் தலை தூக்கின. மெழுகுவர்த்திகள் உள்ள பெட்டியின் அருகே அவன் நின்று கொண்டிருந்ததாகத் தோன்றியது. டிக்கோனின் மனைவி மாதாகோயில் பண்டிகைக்காக ஐந்து கோப்பெக் விலையுள்ள மெழுகுவர்த்தி ஒன்று தரும்படி கேட்டு நின்றாள். பெட்டியிலிருந்து அதை எடுத்து அவளிடம் கொடுக்க விரும்பினான் அவன். ஆனால் அவனது கைகள், பைகளினுள் இறுக்கமாகச் சிக்கியிருந்ததால், மேலே எழவில்லை. அந்தப் பெட்டியைச் சுற்றி நடக்க அவன் ஆசைப்பட்டான். ஆனால் அவன் கால்கள் நகர மறுத்தன. அவன் கால்களில் அணிந்திருந்த புத்தம் புதிய சுத்தமான ரப்பர் உறைகள் தரையோடு ஒட்டி வளர்ந்திருந்தன. அவனால் அவற்றைத் தூக்கவும் முடியவில்லை; அவற்றினுள்ளிருந்து கால்களை விடுவிக்கவும் இயலவில்லை. அதன்பிறகு, மெழுகுவர்த்திப் பெட்டி பெட்டியாக இராமல் ஒரு படுக்கையாகக் காட்சி அளித்தது. திடீரென்று வாஸிலி ஆன்ட்ரீவிச் தான் தனது வீட்டிலுள்ள படுக்கைமேல் படுத்துக் கிடப்பதைக் கண்டான். அந்தப்படுக்கையில் அவன் நன்றாகப் படுத்துக் கிடந்தான். அங்கிருந்து அவனால் எழுந்திருக்க முடியவில்லை. ஆனாலும் அவன் அவசியம் எழுந்தாக வேண்டும். ஏனெனில் போலீஸ் அதிகாரி ஐவான் மேட்வீயிச் அவனைத் தேடி வருவார். அவன் அவருடன் போயாக வேண்டும்—காட்டு விஷயமாகப் பேரம் பேசி முடிவு செய்வதற்கோ, அல்லது முக்கார்ட்டியின் உடல் மீதுள்ள பட்டைவார்களைச் சரியாகப் போடுவதற்கோ, எதற்கோ!