இரண்டு பேர்
121
அறிகிறேன்.’ முன்பு தன்னை அழைத்தவரின் குரலை அவன் மீண்டும் கேட்டான். ‘நான் வருகிறேன்! வந்து விட்டேன்!’ என்று உவகையோடு எதிர்க்குரல் கொடுத்தான் அவன். அவன் உள்ளமும் உடலும் ஆனந்த மயமான உணர்ச்சியினால் நிறைந்துவிட்டன. தான் கட்டற்றவனாகி விட்டதையும், இனி எதுவும் தன்னைப் பிடித்து வைத்திருக்க முடியாது என்பதையும் அவன் உணர்ந்தான்.
அதன் பிறகு வாஸிலி ஆன்ட்ரீவிச் இந்த உலகத்தில் உள்ள எதையும் பார்க்கவில்லை, கேட்கவில்லை, உணரவுமில்லை.
சுற்றுப்புறம் எங்கும் பனி இன்னும் சுழலிட்டுக் கொண்டுதானிருந்தது. பனியைச் சுருட்டி வீசும் காற்றுச் சுழல்கள் அதே நிலையில் வட்டமிட்டுக் கொண்டுதானிருந்தன. செத்துப்போன வாஸிலி ஆன்ட்ரீவிச்சின் ரோமக் கோட்டுமீதும், நடுங்கியபடி நின்ற முக்கார்ட்டியின் மேலும், பார்வைக்குத் தெளிவாகப் புலனாகாத தன்மையை அடைந்து விட்ட வண்டியின்மீதும் அவை பனியை அள்ளி எறிந்தன. நிகிட்டா வண்டியினுள்ளே, இறந்து போன தனது எஜமானுக்குக் கீழே உஷ்ணம் பெற்றவாறு, படுத்துக் கிடந்தான்.
10
பொழுது புலரும் முன்னரே நிகிட்டா விழித்துக் கொண்டான். அவன் முதுகின் மேலே ஊர்ந்து வரத் தொடங்கிய குளிரினால் அவன் எழுப்பி விடப்பட்டான்.
அவன் ஒரு கனவு கண்டான். மில்லிலிருந்து மாவு மூட்டைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு அவன்