பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2.

அது ஒரு காலம்

ஒரு நாள் சில குழந்தைகள் கணவாய் ஒன்றில் தானிய மணி போன்ற ஒரு பொருளைக் கண்டெடுத்தார்கள். அதன் நடுவே ஒரு கீற்று ஓடிக் கிடந்தது. ஆனால் அது கோழிமுட்டை அளவு பெரியதாக இருந்தது.

அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த பிரயாணி ஒருவன் அந்தப் பொருளைப் பார்த்தான். ஒரு காசு கொடுத்து குழந்தைகளிடமிருந்து அவன் அதை வாங்கினான். அதை நகரத்துக்கு எடுத்துப்போய், ‘அதிசயப் பொருள்’ என்று சொல்லி அரசனிடம் அவன் விற்று விட்டான்.

அரசன் தனது மந்திரிகளை அழைத்தான். அது என்ன பொருளாக இருக்கும் என்று கண்டுபிடிக்கும்படி சொன்னான். மதியூக மந்திரிகள் அனைவரும் யோசித்தார்கள். யோசித்து யோசித்துப் பார்த்தார்கள். அவர்களுக்குத் தலையும் புரியவில்லை, வாலும் விளங்கவில்லை. கடைசியாக ஒரு தினத்தில், அது ஜன்னல் ஓரத்தில் கிடந்த சமயம், பெட்டைக்கோழி ஒன்று உள்ளே புகுந்து அதைக் கொத்தி அதில் சிறு துவாரம் ஒன்று ஏற்படுத்தி விட்டது. அப்பொழுது, அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் புரிந்து விட்டது, அது தானிய மணிதான் என்று.

உடனே அவ் அறிஞர் பெருமக்கள் அரசனை நாடிச் சென்றார்கள். ‘இது ஒரு தானிய மணி ஆகும்’ என்று அறிவித்தார்கள்.