பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அது ஒரு காலம்

131


‘இப்படிப்பட்ட அருமையான தானியத்தை நான் கண்ணால் கண்டு ரொம்ப காலம் ஆகிவிட்டது’ என்று சொல்லி அவன் அதில் கொஞ்சம் கிள்ளி எடுத்து வாயில் போட்டு ருசி பார்த்தான். ‘அதே ரகம் தான்’ என்றும் சொன்னான்.

‘இந்த ரகத் தானியம் எங்கே எப்பொழுது விளைந்தது என்று சொல்லு, தாத்தா. இதுமாதிரி நீ எப்பொழுதாவது வாங்கியது உண்டா? அல்லது வயல்களில் பயிரிட்டது உண்டா?’ என்று அரசன் கேட்டான்.

அம் முது பெருங்கிழவன் தெரிவித்தான்; ‘இது போன்ற தானியம் எனது காலத்தில் எங்கு பார்த்தாலும் விளைந்து வந்தது. எனது சின்ன வயதிலே இத்தகைய தானியத்தைத் தின்றுதான் நான் வளர்ந்தேன். மற்றவர்களை ஊட்டி வளர்த்ததும் இதுபோன்ற தானியத்தினால்தான். இந்த ரகத் தானியத்தையே நாங்கள் விதைத்தோம்; அறுத்தோம்; கதிர் அடித்தோம்.’

‘நீ அதை எங்கிருந்தாவது வாங்கினாயா? அல்லது நீயாகவே பயிரிட்டு உருவாக்கினாயா? சொல்லு தாத்தா’ என்று ராஜா விசாரித்தான்.

அம் முதியவன் புன்னகை புரிந்தான். ‘எனது காலத்தில் உணவுப் பொருளை விற்பனை செய்வது அல்லது விலைகொடுத்து வாங்குவது என்கிற பாபத்தைப்பற்றி எவரும் எண்ணியது கூடக் கிடையாது. பணம் எனும் விஷயமாக எங்களுக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொருவனுக்கும் அவனுக்கே சொந்தமான தானியம் கிடைத்து வந்தது’ என்றான்.

‘அப்படியானால், தாத்தா உன் வயல் எங்கே இருந்தது? இதுபோன்ற தானியத்தை நீ எங்கே பயிரிட்டாய்?’ என்று அரசன் கேட்டான்.