பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

டால்ஸ்டாய் கதைகள்


கிழவன் பதிலளித்தான்: ‘கடவுளின் பூமிதான் எனது நிலம். எங்கெங்கு நான் உழுதேனோ அங்கெல்லாம் எனது வயல்தான். நிலம் தாராளமாகக் கிடந்தது. அதைத் தனது உடைமை என்று எந்த மனிதனும் சொந்தம் கொண்டாடியதில்லை. உழைப்பை மட்டுமே தங்களுக்குச் சொந்தமானது என்று மனிதர் குறிப்பிட்டு வந்தனர்.’

‘இன்னும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு, போதும். முதலாவது, பூமி அந்தக் காலத்தில் மட்டும் ஏன் இத்தகைய தானியங்களைத் தந்தது, இப்பொழுது ஏன் இப்படி விளைச்சல் தருவதில்லை? இரண்டாவதாக, உனது பேரன் இரண்டு கோல்கள் ஊன்றி நடப்பானேன்; உன் மகன் ஒரு கோலின் துணையோடு நடப்பது ஏன்; நீ மாத்திரம் கோல் எதுவும் இல்லாமல் நடப்பது எதனால்? உனது கண்கள் ஒளி நிறைந்து உள்ளன. உன் பற்கள் வலிவுடன் இருக்கின்றன. உனது பேச்சு தெளிவாகவும் காதுக்கு இனியதாகவும் இருக்கிறது. இதெல்லாம் எப்படி நேர்ந்தது?’ என்று ராஜா கேட்டான்.

‘இவையெல்லாம் இவ்வாறு ஏற்பட்டிருப்பதன் காரணம் என்னவென்றால்—தங்கள் உழைப்பைக் கொண்டே வாழும் வழக்கத்தை மக்கள் இழந்து விட்டார்கள். மற்றவர்களின் உழைப்பை நம்பி வாழப்பழகிக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், மனிதர்கள் கடவுளின் கட்டளைப்படி வாழ்க்கை நடத்தினார்கள். தங்களுக்கு உரியது எதுவோ அதைக்கொண்டு திருப்தி அடைந்தார்கள்; மற்றவர்கள் உற்பத்தி செய்ததை அபகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டதில்லை.’ இப்படி விளக்கம் கொடுத்தான் அந்தக் கிழவன்.