பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3.

குற்றமும் தண்டனையும்


விளாடிமிர் என்னும் நகரத்தில் வாலிப வியாபாரி ஒருவன் வசித்து வந்தான். ஐவான் டிமிட்ரிச் அக்ஸனோவ் என்பது அவன் பெயர். அவனுக்கு இரண்டு கடைகள் இருந்தன. சொந்த வீடு ஒன்றும் உண்டு.

அக்ஸனோவ் அழகன். மினுமினுக்கும் சுருட்டை முடி அவன் தலையை அழகு படுத்தியது. வேடிக்கை நிறைந்தவன் அவன். பாட்டுப் பாடுவதில் அவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது. சின்னஞ் சிறு வயதிலேயே அவன் குடிக்கப் பழகி விட்டான். குடி அளவுக்கு அதிகமாகி விடும்போது அவன் அமர்க்களப் படுத்திவிடுவான். ஆனால் அவன் கல்யாணம் செய்து கொண்ட பிறகு குடிப்பதை நிறுத்தி விட்டான். எனினும் சமயா சமயங்களில் குடியை நாடுவதும் உண்டு.

அப்பொழுது கோடை காலம். நிஷ்னி நகரத்துச் சந்தைக்குப் போவதற்காக அக்ஸனோவ் கிளம்பிக்கொண்டிருந்தான். அவன் தனது குடும்பத்தினரிடம் விடை பெற்ற போது, “ஐவான் டிமிட்ரிச் நீங்கள் இன்றைக்குப் போகவேண்டாம். நான் உங்களைப் பற்றி கெட்ட கனவு ஒன்று கண்டேன்” என்று அவன் மனைவி சொன்னாள்.

அக்ஸனோவ் சிரித்தான். “நான் சந்தையை அடைந்த உடனேயே தலைகால் தெரியாமல் குடித்துப் போட்டு ஆடுவேன் என்றுதானே நீ பயப்படுகிறாய்?” என்றான்.