பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

டால்ஸ்டாய் கதைகள்



“என்ன பயமோ, அது எனக்கே புரியவில்லை. நான் கெட்ட சொப்பனம் கண்டேன். அதுதான் எனக்குத் தெரியும். நீங்கள் நகரத்திலிருந்து திரும்பி வந்ததாகக் கனவிலே கண்டேன். ஆனால் நீங்கள் உங்கள் தலையிலிருந்த குல்லாயை எடுத்ததும், உங்கள் தலைமுடி பூராவும் ஒரேயடியாக நரைத்துப் போயிருந்தது” என்று அவள் சொன்னாள்.

அக்ஸனோவ் சிரித்தான். “அப்படியானால் அதிர்ஷ்டம் என்று தான் அர்த்தம். நான் கொண்டு போகிற சரக்குகள் எல்லாவற்றையும் விற்பனை செய்து விட்டு, உனக்கு அன்பளிப்பாக ஏதாவது வாங்கி வருகிறேனா இல்லையா என்று பாரேன்!” என்றான். அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அவன் பயணமானான்.

அவன் கொஞ்ச தூரம் சென்ற பிறகு, தனக்கு அறிமுகமான வியாபாரி ஒருவனை வழியிலே சந்திக்க நேர்ந்தது. இரண்டு பேரும் அன்றைய இராத்திரிப் பொழுதைக் கழிப்பதற்காக ஒரே விடுதியில் தங்கினார்கள். இருவரும் ஒன்றாகத் தேநீர் பருகிவிட்டு அருகருகே இருந்த தனித்தனி அறைகளில் படுத்துறங்கச் சென்றார்கள்.

வெகு நேரம் வரை தூங்கும் வழக்கம் அக்ஸனோவிடம் கிடையாது. மேலும், குளுகுளு என்றிருக்கும் வேளையில் பிரயாணம் செய்வது நல்லது என்று அவன் எண்ணினான். அதனால், பொழுது விடிவதற்கு முன்னரே அவன் வண்டிக்காரனை எழுப்பி, வண்டியில் குதிரைகளைப் பூட்டும்படி கட்டளை யிட்டான்.

பிறகு, பின் பக்கத்தில் குடியிருந்த விடுதிச் சொந்தக்காரனைத் தேடிப் போனான் அவன். கணக்-