பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

டால்ஸ்டாய் கதைகள்

மேல் சட்டையின் விளிம்பை எடுத்து, நல்ல போஷணையினால் மினு மினுத்து நின்ற குதிரையின் முதுகிலே படிந்திருந்த தூசியைத் தட்டித் துடைத்தான். அதன் அழகான தலையில் கடிவாளத்தை மாட்டி, காதுகளையும் நெற்றி மயிரையும் நேர்படுத்தி விட்டான். பிறகு, கட்டைத் தறித்து குதிரையை தண்ணீர் காட்டுவதற்காக வெளியே இட்டுச் சென்றான்.

சாணம் சிதறிக் கிடந்த லாயத்திலிருந்து வழியைக் கண்டுபிடித்து வெளியே வந்த குதிரை, முக்கார்ட்டி, துள்ளிக் குதித்தது. தனது பின்காலை உதைத்து விளையாடியது. குழாயை நாடி, தன்னோடு கூடவே ஓடிவந்து கொண்டிருந்த நிகிட்டாவை ஓங்கி உதைப்பதுபோல் பாசாங்கு செய்தது அது.

‘இந்தா பாரு, இந்தா பாரு, அயோக்கியக் கழுதை!’ என்று நிகிட்டா கடிந்து கொண்டான். உதை அவன் உடம்பில் படாமல், அழுக்குப் படிந்த ஆட்டுத்தோல் மேல்அங்கியை மாத்திரம் உரசும்படியாக, எவ்வளவு ஜாக்கிரதையோடு அந்தக் குதிரை தனது காலை வீசியது என்பதை அவன் அறிவான். முக்கார்ட்டியின் இந்தத் தந்திரத்தை நிகிட்டா வெகுவாகப் பாராட்டுவது வழக்கம்.

குளிர்ந்த நீரைக் குடித்ததும் குதிரை பெருமூச் செறிந்தது. வலுவான அதன் உதடுகள் ஈரம் படிந்து துடித்தன. அவற்றின் ரோமங்களில் தங்கி நின்ற கண்ணாடி போன்ற நீர்த்துளிகள் தொட்டியினுள் விழுந்தன. குதிரை கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டதுபோல் நின்றது. பிறகு நாசியினால் பெருஞ்சீற்ற ஒலி ஒன்றை எழுப்பியது.