பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

119


ஆனால், இவ்வளவு வேகமாகப் போய் எல்லாம் அடங்கிவிடும் என்று நான் நினைக்கவில்லை.

சாப்பிட்டானதும் கேட்டேன்; “என்ன உடம்பாம் அதுக்கு?”

“அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறேள்! மூணு மாசம் குளிக்காம இருந்ததாம்...”

பளிச்சென்று எனக்கு முந்தாநாள் இரவு அவளை கோவிலில் பார்த்தது நினைவிற்கு வந்தது. தோலிலும் உடலிலும் ஊடுருவி கண்ணைக் கவர்ந்த அந்த மெருகு நினைவுக்கு வந்தது.

அக்கப்போர் சீனுவிடம் இவ்வளவு தயவை நான் அரைச் சாப்பாட்டுக்கு, பருவம் கடந்து ஆறு வருஷத்திற்கு அப்புறம் வரக்கூடிய மெருகல்ல அது. தாய்மையின் ஒளி; வயிற்றில் வளர்ந்த சிசுவின் ஒளி; செவ்வட்டையின் ஒளி மாதிரி அது என்னை இப்போது பதற அடித்தது.

“அவ அம்மாக்காரி இருக்காளே - டாக்டர்கிட்டே போய் கேட்டாளாம். அம்பது ரூவா பணம் கேட்டானாம் அந்தத் தடியன். கடைசியிலே-வாசக்கதவு, கொல்லைக்கதவு எல்லாம் சாத்திபிட்டு-இவளே அந்தப் பொண்ணு வாயிலே-வைக்கல், துணி எல்லாத்தையும் வச்சு திணிச்சு வைத்தியம் பண்ணினாளாம். அப்படியே அலறவும் முடியாம, உசும்பவும் முடியாம எல்லாமே அடங்கிப் போச்சாம். அப்படீன்னு நம்ம பூக்காரி சொல்றா. ஆனா குருக்கள் பொண்டாட்டி சொன்னாளாம்; அந்த அம்மாக்காரி கண்ணாடியைப் பொடி பண்ணி தண்ணியிலெ கலந்து அந்த பெண்ணைக் குடிக்கச் சொன்னாளாம், அது குடிச்சுப்பிட்டு வயித்து வலியிலே-அய்யோன்னு ஊரே குலை நடுங்க கத்தி தீத்துப்பிடுத்தாம். அப்பறம் தான் துணியை வாயிலே வச்சு அடச்சு அழுகையை அடக்கினாளாம். அது உயிரையே அடக்கிப்பிடுத்து.”

கேட்கும்போது வயிற்றைப் புரட்டிற்று எனக்கு.

கெளரி குழந்தை மாதிரி விசித்து விசித்து அழ ஆரம்பித்து விட்டாள். என்னையும் அது தளரச் செய்துவிட்டது.

“அந்தப் பொண்ணு ஊத்தின எண்ணெய்க்காவது மனம் இரங்கப்படாதா அந்த சாமி. இவ்வளவு பெரிய கோவிலை கட்டிண்டு உக்கார்ந்திருக்கே! துர்க்கைக்கு முன்னாடி நின்னுண்டு அழுதுன்னேளே, பொம்மனாட்டி கண்ணாலே ஜலம் விட்டா உருப்படுமா அந்தத் தெய்வம்? அவ யாராயிருந்தா என்ன? மனக உருகிக் கண்ணாலே ஜலம் விட்டுதே அது” என்று கெளரி குமையத் துவங்கி விட்டாள்.

கோவிலை ஒட்டினாற் போல இருந்தது மானேஜர் வீடு. சென்று கதவை தட்டினேன்.

“யாரு?”

“நான் தான் சார்.”