பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

சோலை சுந்தரபெருமாள்



கதவைத் திறந்து கொண்டு வந்தார் அவர். வாசல் விளக்கு பளிச்சென்று எரிந்தது.

“ஓ....சாரா, வாங்க, வாங்க, எங்கே இப்படி அபூர்வமா?”

“கோவில்லே பூஜை இல்லைன்னு கேள்விப்பட்டேன்...”

“ஆமா சார் ஒரு சாவு.... தெற்குத் தெருவுலே.”

“அதுதான் கேள்விப்பட்டேன். அது விஷயமாத்தான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“என்ன?”

“கோபுரத்து விளக்கு இல்லாமல் தெருவே இருண்டு கிடக்கு. ஊரிலே திருட்டு பயமா இருக்கு. அதுதான்...”

“ஒரு நாள் இப்படித்தான் இருக்கட்டுமேன்னு நினைக்சேன்.”

இது என்ன அர்த்தமில்லாத பதில்! திகைப்பாக இருந்தது எனக்கு. பேசாமல் உட்கார்ந்திருந்தேன். ஒன்று, இரண்டு நிமிடங்களாயின. இருவரும் பேசவில்லை.

“என்ன இப்படி பதில் சொன்னானேன்னு நினைக்கிறீங்களா? எனக்கு என்னமோ இந்த சாவுக்கு துக்கம் கொண்டாடனும் போல் இருக்கு. செத்துப்போனது யாருன்னு தெரியுமில்ல உங்களுக்கு?”

“தெரியும். ரொம்பக் கண்ராவி.”

“நீங்க கூட பார்த்திருப்பீங்களே. கோவிலுக்கு வருமே அந்தப் பொண்ணுதான். சிரிச்சிப் போன குடும்பம்தான்; ஒப்புத்துக்கிறேன். ஆனால், செத்துப் போனதுக்கு அப்புறம் தூக்கறதுக்கு ஒரு ஆள் கூட இல்லைன்னா இது என்ன மனுஷன் குடி இருக்கிற தெருவா? காக்கா கூட ஒரு காக்கா செத்துப்போச்சுன்னா கூட்டம் கூட்டமாக அலறி தீத்துப்பிடும்கள். மத்தியானம் மூணு மணிக்கு போன உசிரு. ஒரு பய எட்டிப் பாக்கலை, வீட்டிலேயே இருக்கிறது அத்தனையும் பொம்பளை. எல்லாம் சின்னஞ் சிறுசு. அப்படி என்ன இப்ப குடி மூழ்கிப் போச்சு? அவங்க கெட்டுப் போயிட்டாங்க. நாதன் இல்லாம கெட்டுப்போன குடும்பம். பசிக்கு பலியான குடும்பம். என்ன அக்கிரமம் சார்? இந்த மாதிரி மிருகங்களைப் பார்த்ததில்லைங்க நான். நானும் நாலு ஊரிலே இருந்திருக்கேன்-”

மானேஜரின் உதடு துடித்தது. கரகரவென்று கண்ணில் நீர் பெருகிற்று. பேசமுடியாமல் நின்றார். சற்று கழித்து கண்ணைத் துடைத்துக்கொண்டு ஒரு பெருமூச்சில் துக்கத்தை இறக்கிக் கொண்டார்.

“இன்னிக்குக் கடவுள் வெளிச்சம் கேட்பானா? கேட்க மாட்டான். ஊருக்கு மட்டும் என்ன வெளிச்சம்? எத்தனை வெளிச்சம் போட்டால் என்ன, நம்ம இருட்டு கலையப் போறதில்லை. இப்படித்தான் தவிக்கட்டுமே, ஒரு நாளைக்கு...”