பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கலைஞர் மு. கருணாநிதி

தமிழ்ச்சூழலில் கலை இலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பு செய்துள்ள கலைஞர் மு. கருணாநிதி திருக்குவளையில் பிறந்தவர்.

உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்சங்கள் முழுமையாக அமைந்த பல சிறுகதைகளைப் படைத்த மு. கருணாநிதி, மணிக்கொடிக்கு அடுத்த காலத்தில் இந்தத் துறையை வளர்க்க உதவிய ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர். தேர்ந்த-நுட்பமான அவர் சார்ந்துள்ள அரசியல் கொள்கைகளை விமர்சிப்பதோடு விட்டுவிடாமல், சிலர் அவரின் ஒட்டுமொத்த இலக்கியச் சாதனைகளையும் கொச்சைப்படுத்துவது காழ்ப்புணர்வு என்று மட்டுப்படும். இன்னும் சொல்லப்போனால் அவரின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் கூட அவரின் கலை வெளிப்பாட்டின் இலக்கை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

“திராவிட இயக்கக் கொள்கையிலும், தமிழ்ப்பற்றிலும் அண்ணாதுரையின் அடிச்சுவட்டில் நடக்கும் மு.க. எழுத்துலகில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். நீண்ட நாவல்கள், நாடகங்கள் பல எழுதிய இவர் பல சிறுகதைகளையும் எழுதி அந்தத் துறைக்கு வளம் சேர்த்திருக்கிறார்...” என்று சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.

“மு.க.வின் கதைகளில் பல சிறுகதை வடிவ அமைதி கொண்டுள்ளன என்பது தனிச்சிறப்பு. இவர் எழுதியுள்ள ‘குப்பைத்தொட்டி’ என்ற கதை மிகவும் வலிமையானது. யார் தமிழில் தடம்பதித்த சிறுகதைகள் என்ற ஒரு தொகுப்பு தொகுத்தாலும் இந்தச் சிறுகதை விடுபடவே முடியாது.

இவரின் இலக்கிய பிரவேசக்காலத்திலேயே தரம் தாழ்ந்து போய் வந்த ‘திலோத்தமை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த தந்தையும், மகளும் சீரழிந்து போன கதையே ‘வாழமுடியாதவர்கள்.’