பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ முடியாதவர்கள்

டாண் டாண்’ என்று மணிக்கூண்டு கெடிகாரம் பத்து ஒலிகளை முழங்கிற்று. நட்சத்திர டாக்கீசின் கதவுகள் திறக்கப்பட்டன. ‘திலோத்தமா’ படம் முடிந்து விடுதலை பெற்ற சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் வர்ணங்கள் திடீரெனச் சிரித்த பாதரச விளக்குகளால் சோபையிழந்தன. அந்தச் சோபையிலும் சொகுசு மின்னிடுவதாகத் தொடர்ந்து வந்த வாலிபப் பட்டாளம் ‘கம்பரசம்’ பாடிற்று.

“பெண்களுக்குச் சுதந்திரம் அளிப்பதாயிருந்தால் முதலில் இந்த ஆண்களை எல்லாம் அரபிக்கடலில் தூக்கி எறியவேண்டும்” என்றால் ஒருத்தி, சிவப்புச் சேலைக்காரி.

“உலகம் அழிந்துபோக உன்னை யோசனை கேட்டால் அப்போது சொல்லடி இந்த அபிப்பிராயத்தை” எனப் பதில் வீசினால் பச்சைச் சேலைக்காரி.

“திலோத்தமா எப்படிடா?” என்றான் ஒரு இருபத்துநாலு வயது.

“படத்தைக் கேட்கிறாயா?...அல்லது” என்று இழுத்தான் ஒரு மைனர்.

“படம் சுமார். டைரக்ஷன் பரவாயில்லை. கதைதான் பிடித்தமில்லை” என்ற விமர்சனத்தை ஒரு மேதை, பேச்சில் நுழைத்தார்.

“என்ன சார் உங்களுக்குக் கதை பிடிக்கவில்லை!” சினிமாப்பைத்தியம் ஒன்று இடையே குறுக்கிட்டது.

“பிரம்மாவைப் போட்டு கலாட்டா செய்கிறான் சார்” ஒருவர் இப்படி அனுதாப்பட்டார்.

“புராணக் கதையை அப்படியே எடுத்திருக்கான்.”

“பிரம்மா...மும்மூர்த்திகளில் ஒருவர். அவர் சிஷ்டித்தார். திலோத்தமையை! அவளையே அவன் காதலிப்பதென்றால்... தகப்பன் மகளை...சேச்சே.அபத்தம்!”