பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழில் முதல்வன்

திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்தில் தகட்டூர் கிராமத்தில் பிறந்த மா. ராமலிங்கம் இன்று திறனாய்வாளராக தோற்றம் கண்டுள்ளார். ஆனால் அவர் இயல்பிலேயே ஒரு படைப்பாளி-சிறந்த சிறுகதையாசிரியர். பொய்யான இரவுகள், அதற்கு விலை இல்லை. நாளைக்கும் இதே கியூவில்... போன்ற தொகுப்புகள் மூலம் அவர் சிறந்த சிறுகதையாசிரியர் என்பது நிரூபணம் ஆகிறது.

‘இவருடைய கதைகளில் கற்பனையைவிட உண்மை வாழ்வே அதிகமாய் இடம் பெற்றுள்ளது. இவர் பார்த்தவற்றை உணர்ந்தவற்றை மன நெகிழ்ச்சியோடு கதைகளாக வெளிப்பட்டிருக்கின்றன.’

‘நான் காணும் இன்றைய வாழ்கை, அவ்வப்போது எனக்குப் பல கதைகளைச் சொல்லியிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நான் உங்களுக்குத் திருப்பிச் சொல்லியிருக்கிறேன்...’ எழில்முதல்வனே தனது சிறுகதைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் இப்படி.

அகிலன் இவரைப்பற்றி, “இவர் ஒரு தேர்ந்த சிறுகதை ஆசிரியர். கிராம நகர்ப்புறத்து வாழ்க்கையில் இவர் கண்டு கேட்டு அனுபவித்த உண்மைகள், இவரிடம் அழகான சிறுகதைகளாக மலர்ந்துள்ளன. அற்புதமான சில பாத்திரப் படைப்புகளையும் கண்டு இன்புற முடிகிறது. ஆர்ப்பாட்டமோ, ஆரவாரமோ இல்லாமல் அமைதியாகக் கதைச் சொல்லும் திறன் இயல்பாக அமைந்திருக்கிறது. உண்மை வாழ்க்கையோடு ஒட்டிய எதார்த்த வாதக் கற்பனையே கதைகளாகப் படைத்துள்ளார். எளிய இனிய உயிரோட்டமுள்ள தமிழ் நடை, படைப்பவரை கவர்ந்திழுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது...”

அவர் எழுதிய ‘அவள் நெஞ்சம்’ குறிப்பிடத்தக்க சிறுகதை...

‘அன்றைக்கு இரவு முத்துத்தாண்டவனின் நாயனக்கச்சேரியும், திருவாரூர் அலங்காரத்தின் சதிர்க்கச்சேரியும் நடக்கவிருக்கிறது... திருவாரூருக்கே உரிய பெருமையையும், வளமையையும் எழுதியுள்ள படியால் நாமும் பெருமைபடலாம்.