பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

187



“ஏண்டியம்மா, திருநாளும் அதுவுமா. ஊர் ‘ஜே’ ‘ஜே’ண்ணு இருக்குது. நீ என்னண்ணா என்னத்தையோ பறிக்கொடுத்தவ மாதிரி அலங்கோலமா படுத்திருக்கே! உன் புருஷன் கச்சேரியைக் கேட்க ஊரே திரண்டு வாரப்ப நீ மட்டும் ஏன் இங்கேயே அடஞ்சி கிடக்குறே?...” என்று பரிவோடு கேட்டுவிட்டுப் பக்கத்தில் அமர்ந்தாள். தில்லைக்கண்ணுவின் கீச்சுக் குரலைக் கேட்டு குழந்தை செல்வம் தூக்கம் கலைந்து புரண்டு முனகினான். செல்வத்தைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்த வடிவு நெற்றியில் படிந்த கூந்தலை ஒதுக்கிக்கொண்டு “வாங்க மாமி...” என்றாள்.

“ஒண்ணும் கவலைப்படாதேடி அம்மா!...ஆம்பளைங்க எப்டியும் இருப்பாங்க. நாம்தான் பொறுமையா இருந்து ‘புருஷாளை வழிக்குக் கொண்டு வரணும்...” என்று அவளுக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்துக்கொண்டு கனிந்து கொண்டிருந்த துயரத் தீயை மேலும் ஊதிவிட்டாள் கிழவி. பின் அவளே சென்னாள்! “வடிவு, நாமும் சும்மா சொல்லப்படாது. அந்த அலங்காரத்தைப் பாத்தா நாம் எதுவும் தப்பாச் சொல்லத் தோணலே. முகத்திலே சின்னக் குழந்தை மாதிரி அப்படியே பால் வடியுது. அந்தப் பெண்ணோட அடக்கமும், சொகுசும் ஒரு மாதிரிதான். அதைக் கொறை சொல்ல முடியாது முத்துத் தாண்டவன் கெட்டலையுறதுக்கு அவ காரணம் இல்லே. எல்லாம் இவன்தான்.”

கிழவி தன் கணவனைக் குறைத்துப் பேசுவது வடிவுக்குப் பிடிக்கவில்லை. என்றாலும் அவன் சொல்வதற்கு ஏதேனும் பதில் சொல்லவேண்டுமே என்பதற்காக “ஆமாம் மாமி! முந்தா நாளு நான் கோயிலுக்குப் போயிருந்தப்ப அவளைத் தூரத்திலே இருந்து பார்த்தேன். நம்ம தலைவிதிக்கு அவளை நொந்துக்கறது தப்புதான்” என்றாள்.

“அந்த அலங்காரம் ஆட்டக்காரியாக இருந்தாலும் நல்ல மனசு உள்ளவளா இருக்கிறதுனாலே அண்ணைக்கி உன் புள்ளே சிக்கா கிடக்கிறாண்ணு கேள்விப்பட்டதும் துடியாத் துடிச்சா! ஆள்மேலே ஆள்விட்டு விசாரிச்சா...”

கிழவியின் பேச்சில் உண்மை இருப்பது வடிவுக்குத் தெரிந்தது. சிறுவன் செல்வம் கணையும், வெட்டும் வந்து படுக்கையில் கிடந்தபோது அலங்காரத்து வீட்டு வேலைக்காரன் அடிக்கொருதரம் வந்து பார்த்துச் சென்றது நினைவுக்கு வந்தது. அலங்காரமே வடிவாம்பாளின் வீட்டுக்கு வந்து பார்க்க நினைத்தாள் என்றும், ஒருவேளை வந்தால் ‘ஊர் என்ன சொல்லுமோ’ என்று அஞ்சி வராமல் இருந்துவிட்டாள் என்றும் வேலைக்காரன் வடிவாம்பாளிடம் சொல்லியிருந்தான்! என்ன இருந்தாலும் வடிவாம்பாளின் பெண்மனம் அலங்காரத்தை அங்கீகரித்துக் கொள்ள மறுத்தது.