பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

சோலை சுந்தரபெருமாள்



“இதெல்லாம் என்ன தாத்தா?”- சற்றுக் கோபத்துடனேயே வினவினேன் நான்.

“ஒண்ணுமில்லையம்மா. இன்னிக்கு முதல் தேதி. ‘பிஞ்சின்’ வாங்கினேன். குழந்தைகளுக்கு வேர்க்கடலைகூட நான் கொண்டுவரவில்லை.

அந்தோணி எழுந்து நின்றான். அவன் இடுப்பில் ஓர் அரைக் கால்சட்டை, முழங்கால் வரை மேஜோடு; காலில் பழைய பூட்ஸுகள்; மேலே அரைப் பழசான இராணுவச் சட்டை, மார்பின் இடது பக்கத்தில் பல வண்ண விருதுகளும், பதக்கங்களும் தொங்கின. நிமிர்ந்து நின்றால் ஆறடிக்குக் குறையாத உயரம். அந்த இராணுவ உடையில் அந்தோணியின் தோற்றம் பொலிவுடன் விளங்கியது.

என்னை அறியாமல் எனக்கு அந்தோணியிடம் மரியாதை தோன்றியது. என் கணவரும் படை வீரரே. ஒருவேளை தொழில் முறையினால் ஏற்பட்ட தோழமையோ? “வீட்டுக்கு வா தாத்தா” என்று அழைத்தேன். தாத்தாவும், குழந்தைகளும் வராந்தாவில் உட்கார்ந்தார்கள்.

“இதெல்லாம் என்ன தாத்தா?” ரோஸி அந்தோணியின் மார்பின் தொங்கிய பதக்கங்களைக் காட்டி வினவினாள்.

“இதுவா, இது ஆப்ரிகன் ஸ்டார் அடுத்தது மிடில் ஈஸ்ட், மூன்றாவது ஊண்ட் ட்ரைப்.”

ரோஸிக்கு ஒன்றும் புரியவில்லை. “ஸ்டார் என்றால் என்ன?”

“அதாவது அந்த ஊர்களிலெல்லாம் போய் நாங்கள் சண்டை போட்டிருக்கிறோம்னு அர்த்தம். அந்த நீலவர்ணக் கோடு கைக்குண்டினால் நான் விரல் இழந்ததற்கான வெகுமானம்.”

“நீ பேசறது ஒண்ணுமே புரியலையே தாத்தா.”

“ரொம்ப வருஷத்துக்கு முன்னாலே நான் பட்டாளத்திலே இருந்தேன். அப்போ எதிரிங்க எங்க மறை குழியிலே ஒரு கைக்குண்டை எறிஞ்சானுங்க. அது வெடிச்சிருந்தால் அங்கே இருந்த இருபது பேரும் செத்துப் போயிருப்போம். சட்டுனு அந்தக் குண்டைப் பொறுக்கி எதிரிங்க இருந்த பக்கமே எறிஞ்சேன். அதுக்குள்ளே குண்டு வெடிச்சிட்டுது. என்றாலும் நாங்கள் தப்பிவிட்டோம். ஆனால் என் இடது கையில் இரண்டு விரல்கள் போய்விட்டன.”

தாத்தாவின் இடது கையைப் பார்த்தேன். கடைசி இரண்டு விரல்களின் இடம் மொண்ணையாக இருந்தது.

அந்தோணிக்கு ஒரு கோப்பை தேனீர் தயாரித்துக் கொடுத்தேன். “உனக்குக் குழந்தை குட்டிகள் யாரும் இல்லையா?”