பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

சோலை சுந்தரபெருமாள்



“உண்மை அம்மா. இப்போது கூட ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் அவரிடமிருந்து கார்டு வரும்.”

ஆங்கிலேயர்களின் பெருந்தன்மையை எண்ணி வியந்தேன். அந்தோணி புறப்படத் தொடங்கியதும் ஓர் எட்டணா நாணயத்தை எடுத்து அவனிடம் கொடுக்க வந்தேன்.

“தேவையில்லை அம்மா. தற்போதைக்குக் கர்த்தர் தருகிறார். உங்கள் பிரியம் ஒன்றே போதும்.”

தாத்தா சென்ற திசையை நோக்கியவாறு நெடுநேரம் நின்றேன். படையினர் உடுப்பணிந்திருந்த தாத்தாவின் நடையிலே கூட ஒரு கம்பீரம் இருந்தது.

மறுநாள் ரோஸியின் அப்பா ஒரு மரியாதை அணி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. அவருடைய கால் பட்டிகளிலும், இடுப்புப் பட்டையிலும் பசுமண் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தேன். எவ்வளவு நிறையத் தடவினாலும் வெயிலில் உலர வைத்ததும் எல்லாம் உதிர்ந்துவிட்டது. கையில் சிறிய தூக்குக் கூடையுடன் அந்தோணி அங்கு வந்தார். நான் மேற்கண்ட வேலையைச் சரியாகச் செய்ய முடியாமல் திகைப்பது கண்டு அவர் எனக்குத் துணைபுரிய முன்வந்தார். “அம்மா, சோறு வடித்த கஞ்சி இருக்குதா? ஆறியதாயிருந்தால் நல்லது.”

தாத்தாவிடம் கஞ்சியைக் கொண்டு வந்து தந்தேன்.

பச்சை மண்ணைத் தூளாக்கிக் கஞ்சியுடன் கலந்து பசையாக்கினார். தாத்தா, பட்டிகளையும், பட்டையையும் தண்ணிரில் ஊற வைத்துக் கழுவினார். அவை பாதி உலரும்போது அவற்றின் மேல் கஞ்சிப் பசையை ஒரே சீராகத் தடவினார். பசை உலர்ந்ததும் பட்டிகள் புதியவை போலப் பளபளத்தன. வேலை செய்யும் தாத்தாவின் கை லாகவத்தைக் கண்டு வியந்தேன்.

“தாத்தாவுக்கு எல்லா வேலையும் வரும் போலிருக்கிறது!”

“பட்டாளக்காரனுக்குத் தெரியாத வேலையே இருக்கக்கூடாது. எந்த வேலையை எடுத்தாலும் அதைச் சுத்தமாய்ச் செய்யணும். மனசைச் செலுத்தணும்.” தாத்தாவின் கண்கள் பெருமித உணர்ச்சியில் பளபளத்தன.

“தாத்தா, பிற்பகலில் உனக்கு வேலை ஏதும் இல்லையல்லவா? தினமும் வந்து எங்களுடைய பூட்ஸ், பட்டை ஆகியவற்றைச் சுத்தம் செய்து கொடேன். மாதம் ஏதாவது கொடுத்துவிடுகிறேன்.” எப்படியாவது அந்தோணிக்கு உதவி செய்யவேண்டும் என்று எண்ணினேன்.

“செய்கிறேன் அம்மா. எல்லா வேலையிலும் எனக்குப் பழக்கமுண்டு. மாண்ட்கோமரியின் உடைகளுக்கு இஸ்திரி