பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

347


அவனைத் தீண்டிவிடும் வல்லமையாயிருந்தது. நாற்றம். இருந்தது எல்லாமும் அரைகுறையாக வாசிக்கப்பட்ட இரவல் புத்தகங்கள், நல்ல புத்தகத்தை உடமைக்காரனிடத்தில் திரும்ப ஒப்படைக்கையில் அத்தியந்தமாய் உடலோடு ஒட்டியிருந்த தனி வஸ்துவொன்றை பிய்த்துக் கொடுப்பதான சோகம் நெருடும். புத்தக அடுக்கின் இடையிலிருந்து குறிப்புத் தாள்களையெடுத்து புரட்டத் தொடங்கினான். வெறிபிடித்த கொசுக்கள் அவனைச் சுற்றிவந்து அவ்வப்போது சருமத்திற்குள்ளாக மூக்கைச் செலுத்தியமர்ந்து சில நொடிகள் தியானித்தன. கடந்த வாரம் செல்வரெங்கனோடு நடந்த உரையாடலை எழுதியிருந்ததில், அவனுடைய விஷயமாக இன்னும் கொஞ்சம் சேர்க்க வேண்டியிருந்தது. எழுத முற்படும்போது தற்போதைய உபயோகத்திற்கு சிகரெட் இல்லாதது ஆயாசமேற்படுத்தியது. நசுங்கி சிதறிக் கிடந்தவற்றில் பெரிதாகச் தேர்ந்த ஒரு சிகரெட் துண்டைப் பற்ற வைத்து பேனாவின் முனையால் புள்ளி வைத்தபடியிருந்தான். வராண்டாவில் உதிர்ந்து கிடந்த இலைச்சருகுகளுக்கு அறையைச் சுட்டியது காற்று. யாரோ தடதடத்து ஓடுவது போல அஸ்பெஸ்டாஸ் கூரை மீது மரக்கிளைகள் உராய்கின்ற சப்தம். எழுந்து கதவைச் சாத்திவிட்டு வந்து உட்கார்ந்தான். அடித்தல், திருத்தலாய் தாளில் குழறிக்கிறுக்கியது பேனா, எங்கோ ஒளிபுகாத வானத்தில் பாறையில் உடலைக் கிடத்தியிருக்கும் மலைப்பாம்பின் வயிற்றுக்கோடுகள் துண்டு துண்டாய் தன் மார்பின் ரோமங்களுக்கிடையில் பதியும் பிரமையிடல் கிலி தட்டியது.. நிமிர்த்த மற்ற அச்சத்தில் எழுத முடியாமல் விளக்கை அணைத்து சில்லிட்ட தரையில் படுத்துக் கொண்டான். உற்சாகத்திற்கல்ல இருட்டு. திடீரென்று பக்கத்தில் துழாவி காகிதமும், பேனாவுமெடுத்து மறைப்பு நீங்கித் தொட்டு விட்ட ஒரு வாசகத்தை தோராயமாகக் கணித்து எழுத்துக்களில் நிறுத்தினான்.

ஏகப் பராக்கிரமமாய் வீசிய காற்றுக்குப் பிறகு ஆர்ப்பாட்ட இரைச்சலுடன் வந்தாடியது மழை. கூரையில் நீர்ச்சரங்களாக மோதி அவனைத் திடுக்கிட வைத்து எங்கும் தன் கர்வத் திரை விரித்தது. அவன் உடைகளைக் களைந்து வராண்டாவிற்கு வந்த போது, வெளியேறும் மார்க்கமின்றி அவனுள்ளே பரிதவித்துக் கொண்டிருந்த முறையீடுகளும் இன்னபிறவும் வாசகங்களாக விடுபட்டன. நீரடித்த கண்களின் உறுத்தலை விருப்பத்துடன் சகித்து வளர்கின்ற வாக்கியங்களுடன் படுத்துக் கிடந்தான். அவற்றையெல்லாம் இடிமூழ்கி அங்கீகரித்தது வானம். கவிழ்ந்து படுத்து தரையைத் தழுவி ஓடுகின்ற நீர்மேல் முத்தம் வைத்தான் உதடுகள் இயல்பாயில்லை. கரிப்புச் சுவையொத்த எதுவோ