பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சோலை சுந்தரபெருமாள்


குணசீலர் என்பதால்தான். யாரையும் ஒரு வார்த்தை தவறாகப் பேசமாட்டார். தெய்வபக்தர் ஒருவிதத்தில் வேதாந்தி என்றே சொல்லவேண்டும். முறையாக அதிகமாய்ப் படித்தவர் இல்லை, சொல்லப்போனால், இரண்டாம் வகுப்புக்கு மேல் பள்ளியில் படிக்கவேயில்லை. ஆயினும், பல புஸ்தகங்களை அவருடைய அலமாரியிலே பார்க்கலாம். எல்லாம் பெரும்பாலும் ஸ்தோத்திரங்களும் வேதாந்தபரமான நூல்களுமாகவே இருக்கும். வெறும் வறளிக் கதையெல்லாம் அவருக்குப் பிடிக்காது. நுட்பமான கலைகளை அவர் பயின்றிருந்தால் நிச்சயம் அவருக்குப் புரிந்திருக்கும். ஆனால், அதெல்லாம் வியர்த்தம் என்பது அவருடைய எண்ணம். எனவே, அவை பற்றிய நூல்களையும் அவர் நாடவில்லை. சித்தர், தாயுமானவர், பட்டினத்தார் பாடல்கள், ஆஞ்சநேய பராக்கிரமம், விநாயகர் மான்மியம், திருவிளையாடல் புராணம், தனிப்பாடல் திரட்டு இந்த மாதிரி புஸ்தகங்கள் அவரிடம் ஏராளம். எல்லாவற்றிற்கும் மேலாகத் ‘தஞ்சை பகவத்கீதை வசன'மே அவருக்கு மிகவும் பிடித்தமான புஸ்தகம். அதை அவர் திரும்பத் திரும்பப் படித்திருந்தார். ஆனால், அந்தப் புஸ்தகத்தைத்தான் யாரோ இரவல் வாங்கிக்கொண்டு போய்த் திருப்பிக் கொடுக்கவேயில்லை. அது போனது ஒரு துரதிருஷ்டம் என்றே அவர் கருதினார்.

கேட்டபோதெல்லாம் இல்லையென்னாது கால் அரை பணங்காசு சாந்தப்பனுக்குக் கொடுப்பவர் குருமூர்த்திதான். ஆனாலும் அவனை அவர் கேலி செய்து கொண்டே இருப்பார்.

அவர் வீட்டுக்குச் சித்திரக்கொடியும், சுவாமி உருவங்களும் அமைந்த அலங்கார நிலைப்படியைச் செய்தவன் சாந்தப்பன்தான். ஆனால், அவனும் அறியாமல் அந்த நிலைப்படிக்குக் கீழே குடும்பத்துக்குச் சிரேயஸைத் தருவதற்காக, சில நவரத்தினங்களை அவர் போட்டு வைத்தது ரத்தினசாமிக்குத் தெரியும். எந்தத் தொழிற்கலாசாலையிலும் சாந்தப்பன் பயிலவில்லை. அந்த நாளில் அந்த வழக்கம் ஏது? அவன் கண் கண்டதைக் கை செய்யும். அப்படிச் சொல்வது கூடச் சரி அல்ல; கண் கண்டதன் குறைகளையெல்லாம் நீக்கிக் கற்பனையோடு அற்புதமாய்ப் புதுமையைப் படைக்கும் திறன் வாய்ந்தது, அவன் கை.

“சோம்பேறிச் சாந்தப்பனுக்கு என்ன தெரியும்? ஸ்லிப்பர் கட்டை செய்வான். வேலை செய்ய முடியாத கிளுவைக் கட்டையில் கூட அதைச் செய்துவிடுவான். கேட்டால், அது மிக லேசு; ‘கண்ணுக்குக் குளிர்ச்சி’ என்றெல்லாம் வர்ணிப்பான். ஆனால், ஒரு பெட்டி வண்டி செய்யத் தெரியுமா, பெட்டி வண்டி?” என்று ஒருநாள் சொன்னார் குருமூர்த்தி.

அதையே சவாலாக மதித்து, வேலைக்கு ஆயத்தமாகி விட்டான் சாந்தப்பன்.