பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

சோலை சுந்தரபெருமாள்


இந்தச் சமயத்தில் சிவகாமியின் ஒரு புஜம் அவன் மீது தீண்டியது. தவறித் தன்னை அறியாமலே தான் தீண்டியிருக்க வேண்டும். அப்பாடா! அப்போது, அவள் மேனி எப்படி நடுங்கியது! தன் முதுகைத் தீண்டிய புஜத்தின் அதிர்ச்சியால் அதை அவன் அறிந்து கொள்ள முடிந்தது.

பிறகு தீப்பட்ட கொடிபோலச் சட்டென்று அது விலகியது. ஆனால்...ஆனால்...அதுதான் ஆரம்பம்.

கொஞ்சநேரம் கழித்து அது மறுபடியும் மெல்ல மெல்ல நெருங்கி அவன் மீது பட்டது. விலகியது. இப்படிப் பலமுறை அவன் உணர்ச்சியிலே உள்ளத்திலே ஒரு லாகிரி-பித்தம் ஏறிவிட்டது. உலகத்திலே சரி-தவறு, நன்றி- துரோகம், நன்மை-தீமை என்றெல்லாம் பகுத்துச் சொல்லுகிறார்களே, அந்த விவேகத்தையெல்லாம் நியாயங்களையெல்லாம் கடந்த அதீத நிலையொன்றில் அவன் உள்ளம் சிறகு முளைத்த குருவிபோல் பறக்கத் தொடங்கியது.

பிறகு, நடந்ததெல்லாம் என்னவோ கனவு மாதிரி இருக்கிறது. அப்புறம் ஐந்தாறு நாள்தான் அவன் பூலோகத்தில் ஜீவனோடு, உலவிய மனிதனாகவே இல்லையே; எங்கேயோ மேகத்தோடு மேகமாக மிதக்கும் ஆவிபோல் தான் அவனுக்கு உணர்ச்சி இருந்தது. அந்த நாட்களில் காதுந் தலையுமற்றுச் சின்னபின்னமா கனவை எப்படி ஒட்டவைத்து உருவாக்கிக் காணமுடியும்?

கல்யாணம் முடிந்து எல்லாரும் திரும்பி ஊருக்கு வந்தாயிற்று. அப்போதுகூட, எவனோ குழந்தை காற்றில் பறக்கவிட்ட காகிதப் பட்டம்போல அவன் வீட்டுக்குச் சென்றான்.

ரத்தினசாமி எந்த நாளிலுமே வீட்டில் படுத்ததில்லை. குருமூர்த்தி வீட்டு ஒட்டுத் திண்ணையில்தான் படுப்பது வழக்கம். இது ஏழெட்டு வருஷமாகவே ஏற்பட்டுவிட்ட பழக்கம். அந்த வராந்தா ஒட்டுத் திண்ணையிலேயே சுருட்டி வைத்திருக்கும் அந்தப் படுக்கை, அதை யாரும் கலைக்கமாட்டார்கள், நகர்த்தமாட்டார்கள்.