பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ந. பிச்சமூர்த்தி

கும்பகோணத்தில் பிறந்த ந. பிச்சமூர்த்தி நீண்ட காலம் பிறந்த மண்ணில் இருந்து கொண்டே இலக்கிய தோழர்களுடன் சேர்ந்து சிறுகதை இலக்கியத்திற்கு புதுப்பொலிவை தந்தவர்.

அவர் எழுதிய கதைகளில் வடிவமும் உத்தியும் காலப்போக்குக்கு ஏற்றவாறு மாற்றமடைந்து அவரைச் சிறுகதை எழுத்தாளரின் முன்னணியில் வைத்துக் காண்பிக்கிறது. பல வகையான கருப்பொருள்களைக் கொண்ட அவரது கதைகளில் காணப்படும் ஓர் அடிப்படையான தத்துவநோக்கு அக்கதைகளுக்கு ஆழம் கொடுக்கிறது. அதனால் தான் க.நா.சு. “பிச்சைமூர்த்தியின் கதைகள் வேதாந்த தத்துவம் உடையது” என்று கூறி உள்ளார்.

“நடையிலும், உத்தியிலும் அவசியமற்ற போலிப் புதுமைகளின்றி எந்த விஷயத்தையும் அவர் பொலிவோடு சொல்லும் திறமை பெற்றிருந்தார். மனிதவாழ்வின் நியதியில் அசையாத நம்பிக்கை எப்போதும் கைகொடுக்கும் ஒரு நிதானப்போக்கு இரண்டும் சேர்ந்து பிச்சமூர்த்தியின் சில கதைகள் அமர இலக்கியங்களாகிவிட்டன" என்று சிட்டி-சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.

“எனக்கு எப்போதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்க ரீதியான அறிவுக்கு இரண்டாவது இடந்தான் தருவேன். ஆகையால், எப்போதுமே ஒரு திட்டம் போட்டு, குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதியது இல்லை ...” தனது கதைகள் எழுதப்படுதலை குறிப்பிட்டுள்ளார். இந்த பார்வையோடு பார்க்கும்போது பிச்சமூர்த்தியும் கு.ப.ராவும் இவ்வகையில் மனித மனத்தின் ஆழத்தை அளந்துப்பார்த்தவர்கள் என்று உணர முடிகிறது.

கவிதை நடையால் நம்மைக் கட்டிப்போடும் பாங்கு இவரின் தனித்துவம். ‘சிறுகதை இலக்கணத்தைப் பயில இலக்கியமாக விளங்குவன பிச்சமூர்த்தியின் கதைகள்’ என்று சொன்னால் மிகை இல்லை.