பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



 
10. இணைத்தார்.
ஈரோடு திட்டம் ஏற்கப்பட்டது - நீதிக் கட்சிக்கே ஆதரவு - தேர்தல் தோல்வி - எல்லாம் நன்மைக்கே - 1935 முதல் 1937 வரை.

சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷாரின் இரட்டை ஆட்சி முறை, நீதிக்கட்சி அரசுப் பொறுப்பேற்ற 1920-ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்தது. 1923 முதல் 1926 வரையில் முதன் மந்திரியாயிருந்த பனகல் அரசர் காலத்தில்தான் பெரியாரின் ஆதரவோடு, இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு என்னும் உள்ளாட்சி அமைப்பு முறைகள் மக்களாட்சி அடிப்படையில் பனகல் அரசால்தான் நடைமுறைக்கு வந்தன. கிராமப்புற மருத்துவம், சாலை, விளக்கு, கல்வி அத்தனை வசதிகளும் செய்யப்பட்டன. அதனால் அப்போதெல்லாம் சுயமரியாதை இயக்கத்தைப் பெற்றெடுத்துவிட்ட பெரியாரின் தார்மீக ஆதரவு நீதிக்கட்சிக்குத்தானே கிடைத்து வந்தது. பின்னர் நேரடியான நீதிக்கட்சி ஆட்சியாயிராமல், ஓரளவு ஆதரவு பெற்றுச் சுயேச்சையாகச் செயல்பட்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை நான்காண்டுகள் பதவியில் இருந்தது.

இந்தக் காலத்தில் அமைச்சராயிருந்த சீர்காழி எஸ். முத்தையா முதலியார் முதன்முதலாகத் தமது இலாக்காவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை அமுலாக்கி, அதன்படி அரசு உத்தி யோகங்கள் அளிக்க முன்வந்தார். பெரியார் தலைகால் புரியாத மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார். பார்ப்பனரல்லாதார் இதற்காக நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டுமானால், அவர்கள் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளுக்கு முத்தையா என்று பெயர் சூட்டவேண்டும் என்கிற அளவுக்குச் சென்று, பாராட்டினார். பின்னர், நீதிக்கட்சி நேரடியாக ஆட்சிக்கு வந்தது. சித்தூர் வி. முனுசாமி நாயுடு முதல் மந்திரியாகவும், சர் பி. டி. இராசன், எஸ். குமாரசாமி ரெட்டியார் மந்திரிகளாகவும் விளங்கினர். 1930 முதல் 1932- வரையில் நீதிக்கட்சியின் தலைவராகவும் இருந்த முனுசாமி நாயுடு திறமையற்றவராகவே காணப்பட்டார். நீதிக் கட்சியிலுள்ளவர்களே அவர்மீது அருவெறுப்புற்றிருந்தனர். காரணம், அவர் சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக்காட்டிக், காங்கிரஸ் மீது அனுதாபங் காட்டி வந்ததே!