பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

152


சி.என். அண்ணாதுரை 1934-ல் எம்.ஏ., பட்டதாரி. அடுத்த ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாடு ஒன்றில் அண்ணாவின் பேசுந்திறனால் பெரியார் கவரப்பட்டார். பெரியாரின் கனிவான கவனிப்புக்கு அண்ணா உள்ளானார். இந்தி எதிர்ப்புப் போரில் 1938-ல் ஈடுபட்டுச் சிறை சென்றார். பெரியாருடன் 1940-ல் ஈரோடு சென்று: ‘விடுதலை’ ஆசிரியரானார். 1944-ல் சேலம் மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டது. புகழ்பெற்ற அண்ணாதுரை தீர்மானம் அங்கே நிறைவேறியது. இயக்கத்துக்கு அண்ணாவின் வரவு இளைஞர்களை ஈர்த்துப் புதுரத்தம் பாய்ச்சியது. பெரியார் உருவாக்கிப் பெருமைக்குரியவராக்கிய எண்ணற்ற சுயமரியாதைத் தளபதிகளில் அறிஞர் அண்ணாவே முதன்மையானவர். பெரியாரின் புகழ் உலகெலாம் பரவியுள்ளதற்கு அண்ணாவை அவர் தமது சீடராக்கிக்கொண்டதும் ஒரு காரணம். சாக்ரட்டீசுக்குப் பிளாட்டோவும், புத்தருக்கு அசோகனும், மார்க்சுக்கு லெனினும் போல் பெரியாருக்கு அண்ணா! இங்கர்சாலும், ரஸ்ஸலும் யாரைக் குருவாகக் கொண்டனரோ; ஆனால் அண்ணாவுக்கு ஆசான் பெரியாரே! 1949-ல் பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்தபோது, தான் தலைவராகக் கண்டதும் கொண்டதும் பெரியார் ஒருவரைத்தான் எனக் கூறித் தலைவர் இல்லாத நிறுவனமாகவே அதனைக் கண்டார் அண்ணா , 1967-ல் அண்ணா தமது அமைச்சரவையையே பெரியாருக்குக் காணிக்கையாக்கியவர். 1969. பிப்ரவரி 3-ஆம் நாள் இந்தப் பேரறிவாளர் கல்லறையானார்; பெரியாரின் கண்ணீரால் குளிப்பாட்டப்பெற்றார். “புரந்தார் கண்நீர் மல்கச் சாகிற் பின் சாக்காடு இரந்து கோள் தக்க துடைத்து.”

அடக்குமுறை வெறியாட்டம் போட ஆரம்பித்துவிட்டால் அதற்கு முடிவேது? மதுவருந்திய மந்தியைத் தேளும் கொட்டி விட்டால் எப்படியிருக்கும்? “விடுதலை” நாளேட்டின் மீது ராஜத்து வேஷ, வகுப்புத்துவேஷ வழக்குகள் போடப்பட்டன. அரச வெறுப்புக் குற்றம் என்பது தள்ளப்பட்டது. வகுப்பு வெறுப்புக் குற்றத்துக்காக “விடுதலை” ஆசிரியர் பண்டித முத்துசாமியும், வெளியீட்டாளர் ஈ. வெ. கிருஷ்ணசாமியும் ஆளுக்கு ஆறுமாதச் சிறைத்தண்டனை பெற்றனர் கோவையில்.

தமிழர் தன்மான உணர்வோடு, மிகுந்த வீறுகொண்டு எழலாயினர். நாடு முழுவதும் தமிழ் வாழ்க இந்தி ஒழிக எனும் - வீரமுழக்கம் ஒலிக்காத இடமில்லை. அன்று ஆச்சாரியார் மூட்டிய