பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

448

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



40 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் ரஷ்யா சென்று வந்து, சோஷலிச லட்சியத்தைத் தமிழ்நாடு எங்கும் பரப்பினார்கள். அது தமிழகத்தோடு நின்றுவிடாமல், இந்தியா பூராவும் பரவியது. பெரியார் ஜூஸ்டிஸ் கட்சியிலிருந்த போதும். பொருளாதாரப் புரட்சியை உண்டுபண்ணிவிடுவாரோ என்று பயந்து. ஜஸ்டிஸ் ஆட்சியே இவரை ஜெயிலில் போட்டார்கள்!

அவர்கள் பாடுபட்டு, விதைவிதைத்துக் களை எடுத்து விட்டார்கள். நாம் செய்ய வேண்டியது அறுவடைதான். அதைக்கூட நாம் செய்ய மாட்டோமென்று சொல்ல முடியுமா என்ன? மனதில்பட்டதை மறைக்காமல் சொல்லக்கூடிய துணிவு, எனக்குத் தெரிந்த வரையில், அவர் ஒருவருக்குத்தான் உண்டு! யாருடைய தயவு தாட்சண்யத்தைப் பற்றியும் அவருக்குக் கவலையில்லை. தனக்கு நியாயமாகப்பட்டதைச் சொல்லி வரும் தலைவர், நீண்ட நாள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஏன் இப்படி ஊர் சுற்றுகிறீர்கள்? என்றுகூட நான் கேட்டேன். பத்து நாள் வெளியிலும், பத்து. நாள் ஆஸ்பத்திரியிலும் இருக்கிறார்; மக்கள் நல்வாழ்வு வாழவேண்டு மென்ற லட்சியத்துக்காக"

பெரியாருக்கு மிக விருப்பமானதும், தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே, முதன்முதலாகக் குடும்பக்கட்டுப் பாடுபற்றிக் கர்ப்ப ஆட்சி என்ற தலைப்பில் பெரியார் எடுத்துக் காட்டியதுமான-குடும்பநல விழா ஒன்று 20.9.67 மண்ணச்சநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. மலர் வெளியிடும் நிகழ்ச்சியில் பெரியார் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். அடுத்து ஒரு சிறப்பான விழா, சென்னை மயிலைப்பகுதி தி.மு.க. நடத்திய அண்ணா பிறந்தநாள் விழா| 22.9.67 மாலை ஓஷியானிக் ஓட்டல் பின்புறம் நடந்தது. மயிலை எஸ். வி.வேலு தலைமை தாங்கினார். அதில் கலந்து கொண்டு இருகழகத்தவரும் பிணைந்த பின்னர், அண்ணாவைப் பாராட்டிப் பெரியார் பேசிய முதல் தி.மு.க. பொதுக்கூட்டம் இது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் குழுமி நின்றனர். பெரியார் உரையாற்றினார்:

“பேரன்பிற்குரிய தாய்மார்களே! பெரியோர்களே! தலைவர் அவர்களே மகாசந்நிதானம் அவர்களே! கனம் கருணாநிதி அவர்களே! மாதவன் அவர்களே மற்றும் உள்ள தோழர்களே! இன்றைய தினம் இங்கு கூட்டப்பட்ட இந்தக் கூட்டமானது தமிழக முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்தநாள் பாராட்டுக் கூட்டம். அண்ணா அவர்களைப் பாராட்டவோ, வாழ்த்துக் கூறவோ நான் வரவில்லை. ஆனால் இப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்த உங்களைப் பாராட்டவும் வாழ்த்துக் கூறவுமே வந்திருக்கிறேன். நீங்கள், இந்த ஆட்சி, நீண்ட நாள் நீடித்து இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று எடுத்துக் கூறவே இங்கு வந்திருக்கிறேன்.