பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

453



தென் சென்னையில் முரசொலி மாறன் வெற்றி பெற்றதும், மக்கள் தமிழராட்சிமீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதற்கும், தமிழரின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சி மங்கவில்லை என்பதற்கும் இது நல்ல சான்றாகும் என்றார் பெரியார். திருக்குறளில் காணப்படும் மூடநம்பிக்கைச் சொற்களைப் பட்டியலிட்டு, 82 இருப்பதாகப் பெரியார் எடுத்துக் காட்டியிருந்தார். காட்டுமிராண்டிகளுக்கு 37 வகையான அடையாளங்கள், சோதிடம் பார்ப்பது போல் பல்வகை, உண்டு என்று ஒரு நாள் விளக்கியிருந்தார். பூணலும் நெற்றிக்குறியும் அணிகின்றவர்களே நீங்கள் பேசுகின்ற சமதர்மத்துக்கு இவை நோர்பகையாயிற்றே - என்று ஏளனம் செய்தார் ஒரு நாள்

8.11.67 அன்று திருச்சி பெரியார் பள்ளிகளின் நிறுவனர் நாளில் கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு, நாட்டில் விழிப்பு உணர்ச்சியை உண்டாக்கியவர் பெரியார் என்று கூறினார். பெருமக்கள் 1,000 பேர் பிரியாணி விருந்தில் பங்கேற்கப்; பெரியாரும் மணியம்மையாரும் உபசரித்தனர். கோயில்களின் உபரிப்பணம் சமூக நலனுக்கே செலவிடப்படும் என்றார் முதலமைச்சர் அண்ணா . அவரது இந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா உரையினை 19, 20.11.67 இரு நாட்களும் வெளியிட்டு “விடுதலை” அண்ணாவின் கூரிய பகுத்தறிவுக் கருத்துகளையும், ஆங்கில மொழி உபயோகத்தின் மேன்மையையும் சுட்டிக்காட்டிற்று. 4.11.67 அன்று, ஏழாண்டுச் சிறைத் தண்டனை பெற்ற நடிகவேள் எம்.ஆர். ராதா, 15-ந் தேதி ஜாமீனில் வெளிவந்திருந்தார். சென்னை போயஸ்ரோடு அவரில்லம் சென்று, 16.11.67 அன்று, பெரியாரும் மணியம்மையாரும் ராதாவைச் சந்தித்து வந்தனர்.

“காங்கிரஸ்காரர்களே! நான் 'காங்கிரசுக்கு எதிரி அல்ல. உங்களில் காமராசரை நீக்கி விட்டால், மீதி உள்ளவர்களின் தரம் என்ன? தி.மு.க. வில் உள்ள கடைசி மனிதனை விட மேலானவர் உங்களில் யாருமில்லை! ஆதலால் உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள், தி.மு.க. ஆட்சியாளர்களே! உங்களைப் பகுத்தறிவாளர் என்றும், ஜாதி ஒழிப்பாளர் என்றும் பிரகடனப் படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் 9 மாதக் குழந்தைகள்தானே! உங்களைப் பார்ப்பனப் க்ஷயக்கிருமிகள் சுற்றும்; எச்சரிக்கையாயிருங்கள்! ஐக்கோர்ட் தலைமை நீதிபதியோ பார்ப்பனர்; நமது நீதிபதிகள் நிறைய வரவேண்டும்” என்ற ரீதியில் பெரியார் அறிவுரைகள் இருந்தன. சென்னை மாநகராட்சி, பெரியாருக்கு 22.11.67 அன்று மை லேடீஸ் பூங்காவில் வைத்துச் சிறப்பான வரவேற்பு வழங்கிப் பெருமை கொண்டது. அப்போது மேயர் இரா.சம்பந்தம்.

28.11.67 அன்று சட்டமாக்கப்பட்ட இந்து திருமண (தமிழ்நாடு திருத்த) மசோதா திராவிடருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக்