பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சொல்வதுண்டு. அவர் பேச்சில், காங்கிரசுக்கு எவ்வளவு நேரம்? சமுதாயத்துக்கு எவ்வளவு நேரம்? என்பதை நீர் கூர்ந்து கவனித்ததுண்டா?' என்று நான் கேட்பேன்

இவரைப் பாராட்டதவரே ஒருவர் கூட இல்லை. பெரியார் எங்கள் பகுதியில் பிறக்கவில்லையே என்று ஜெகஜீவன்ராம் என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டார். அமெரிக்காவில் பெரியாரைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவரைப் போலத் தன்னைப் பின்பற்றிவர லட்சோபலட்சம் தொண்டர்களைப் கொண்ட பகுத்தறிவு வாதி, உலகில் வேறெங்குமில்லை . 90 வயதாகியும் இவருக்குள்ள சுறுசுறுப்பு, 45 வயது உள்ளவருக்கும் வராது! தொலைவிலிருந்து பேச்சைக் கேட்டால் 'இவர் வயது என்ன நாற்பத்தய்ந்தா, ஐம்பத்தொன்றா?' என்று கேட்பார்கள். சற்றுக் கோபமாகப் பேசக் கேட்டால், 'முப்பத்தய்ந்தா, முப்பத்தெட்டா?' என்று கேட்பார்கள்!

-இவரது கொள்கைகளை நிறைவேற்ற என்னால் இயன்றவரை பாடுபடுவேன். இந்த ஆட்சியால் பயனில்லை; எதுவும் செய்ய இயலாது என்றால், ஒட்டிக் கொண்டிருப்பேன் என்று யாரும் கருத வேண்டாம்! எனக்கு இப்பதவி இனிப்பானதல்ல. இப்பதவிக்கு வருகிற நாள்வரை, நான் கடிகாரத்தையும், காலண்டரையும் பார்த்ததில்லை ; காரணம் அதுவரை நான் சம்பளம் வாங்கும் உத்தி யோகஸ்தனல்ல! (பெரியாரணிந்திருந்த கெடிகாரம், ஒரு மோதிரம் கூட, அண்ணா அணிந்ததில்லை!)

நம்முடைய கழகத் தோழர்கள் திராவிடர் கழகத் தோழர்களை விரோதிகளாகக் கருதக் கூடாது. இரண்டு கொடிகளும், ஒரே அளவுதான்; இரண்டிலும் நிறம் கருப்பும் சிவப்பும்தான்! தந்தை பெரியாரவர்கள் சமுதாய மாற்றத்தைக் காணப் பாடுபடுகிறார்கள். சமுதாயமும் மாறி இந்த ஆட்சியும் இருந்து செயல்பட்டால், சுதியோடு சேர்ந்த இசையாக அமையும்; இல்லாவிடில் அபசுரமாகத் தானிருக்கும்!

எனக்கு முதல் முதல் நகரசபை வரவேற்புத் தர, ஈரோட்டில் ஏற்பாடு செய்தவரே பெரியார்தான். என்னை ஊர்வலத்தில் அமர வைத்துத்தான் நடந்தே வந்தார்கள் (1948ல்). இன்று அதே பெரியாரே, எனக்குப் பொன்னாடையும் போர்த்தினார்கள். நான் ஈரோட்டில் அவர் வீட்டில் தங்கியிருந்தபோது, இரவில் வெகுநேரம் கழித்துப் படுக்கச் செல்வதால், காலையில் கண் விழிக்காமல், அதிக நேரம் தூங்குவேன். அவர் அதிகாலையில் எழுந்தவுடன், என்னைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். சில சமயங்களில், நான் அணிந்திருக்கும் துணிகள் விலகி இருக்கும். அப்போதெல்லாம் அவர், தான் மேலே போட்டிருக்கிற சால்வையை எடுத்து, என்மீது போர்த்திவிட்டுப் போவார். அதைவிட இந்தப் பொன்னாடை எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை!