பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தந்தை பெரியார் சிந்தனைகள்



(ii) இந்த நாட்டில் பறையன், சக்கிலி, வண்ணான், நாவிதன் இருக்கின்றனர். இவர்களெல்லாம் நடைமுறையில் ஒவ்வொரு சாதியாக அல்லவா இருக்கின்றனர்? இந்த நிலையெல்லாம் ஒழிய வேண்டும் என்று நான் (பெரியார்) சொல்லவில்லை. இந்தத் தொழில்கள் உலகத்தில் எல்லா நாட்டிலும்தான் இருக்கின்றன. ஆனால் இந்தத் தொழிலை இன்னின்ன சாதி மக்கள்தாம் செய்யவேண்டும். அம்முறையில் செய்கின்ற அவர்கள் எல்லாம் “கீழ்ச்சாதி மக்கள்” என்று சொல்லுகின்றாயே? இது சரியா? என்று கேட்கிறார் அய்யா.

இன்று சென்னையில் ஒரு முதலியார் தச்சுவேலையையும், ஒரு போயன் கொத்து வேலையையும், ஒரு நாயுடு இரும்பு வேலையையும் செய்து கொண்டிருப்பதை நான் அறிவேன். நகர்ப்புறங்களில் இந்தச் சாதிமுறை மெதுவாக ஒழிந்து வருகின்றது. ஆயினும் அவர்கள் தம்மை ‘முதலியார்’, ‘போயன்’, ‘நாயுடு’ என்றே சொல்லி வருகின்றனர். ‘பிறவிக்குணம்’ இன்னும் மறையவில்லை.

(iii) உண்மையில் சாதியின் பெயரால் இந்தத் தொழிலாளி வர்க்கம் என்பது சிருட்டிக்கப்பெறவில்லை என்று சொல்லப் பெறுவது உண்மையானால் ‘மலம்’ எடுக்கின்ற தொழிலாளி மக்களிலும் நாலு பார்ப்பனர்கள் இருக்க வேண்டுமே. எந்தப் பார்ப்பானாவது மலம் எடுத்ததாக யாராவது கேள்வியுற்றீர்களா? தாழ்த்தப்பெற்ற மக்கள்தாமே அந்தத் தொழிலைச் செய்து வருகின்றனர்?

பெரியாரின் இந்த வினாவைப் பார்ப்பனர் ஒத்துக் கொள்வதில்லை. மலம் எடுக்கும் தொழிலை ஒரு முதலியார், ஒரு நாயுடு, ஒரு பிள்ளை செய்கின்றாரா? என்று எதிர்வினா தொடுத்தால், வாயடைத்துப் போய்விடுகின்றது. பேச்சு எழமுடியவில்லை.

(iv) சாதி இருக்கும் வரையில்தானே சாதித்தொழில்? சாதித்தொழில் இன்று இல்லாவிட்டால் பிழைப்புக்கு வழி இருக்காது. எல்லா மக்களும் படித்துவிட்டால் அவரவர் சாதித் தொழில் செய்ய முற்படுவார்களா? பேனா எடுக்கத்தானே நினைப்பார்கள்? நம் பெண்கள் எல்லாம் பள்ளியிறுதிப் படிப்பு வரை படித்து முடித்துவிடுவார்களேயானால் களை எடுக்கச் செல்வார்களா? படித்துவிட்டால் வயிற்றுக்கொடுமை ஒருபுறம் இருந்தாலும் பட்டினிகிடக்க முற்பட்டாலும் முற்படுவார்களே ஒழிய ஒருபோதும் சாதித்தொழில் செய்ய முன்வரமாட்டான். வெள்ளைச்சட்டை வேலையைத் (White collar job) தான் அனைவரும் நாடுவார்கள்.