பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிபற்றிய சிந்தனைகள்

143



நெடுநாட்கள் உறங்கிவிட்ட தமிழ்ப் பெண்கள்
தமையெல்லாம் நீஎழுப்பித்
தொடுப்பிர்போர், தமிழ்த்தாயைத் தொலைக்குவழி தடுத்தென்றே துண்டி விட்டாய்!
கொடுங்குற்றம் செய்தனைநீ யபராதம் கொடுவென்று
கூறி இன்னும்
கடுங்காவல் தண்டனையிட் டடைத்தார்கள் தாத்தாவைக்
கம்பிக் கூட்டில்.
[குறிப்பு 1]

என்று பாடலாக வார்த்துக் காட்டி தமிழ் மக்களுக்கு எழுச்சியூட்டினார்.

பெரியார் தண்டனை ஏற்றதுபற்றி அவர்தம் கெழுதகை தோழர் திரு.வி.க. அவர்கள் எழுதியது:

“திரு.ஈ.வெ. இராமசாமிநாயக்கர் கடுங்காவல் தண்டனை ஏற்றுச் சிறைக் கோட்டம் நண்ணினர். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுக, ஒழுகத் தாங்கிய தடியுடன் திருநாயக்கர் சிறைபுகுந்த காட்சி அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர் எல்லாருள்ளத்தையும் குழையச் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

முதுமைப்பருவம்! காவல்! கடுங்காவல்! என்னே! இந்நிலையை உன்ன உருகுகிறது. திருநாயக்கருடன் மிக நெருங்கிப் பழகிய சிலர் அமைச்சர் பதவியில் வீற்றிருக்கின்றனர். அவர்தம் மனமும் சரிந்தே இருக்கும். வயதின் முதிர்ச்சி எவரையும் அலமரச் செய்யும்”

-நவசக்தி 9.12.1938 தலையங்கம்.

இக்கருத்தினயே மனமுருகிப் பாடிக் குமுறுகின்றார் கவிஞர். நாச்சியப்பன்!

வெள்ளியமென் தாடியசைந் தாடத்தன் மேனியிலே
முதுமை தோன்ற
அள்ளிஉடை ஒருகையில் தடியைமறு கையிலெடுத்
தலர்ந்த பூப்போல்
வெள்ளைமனத் தூய்மையது முகத்தினிலே மலர,உடல்
மெலிந்து கண்டோர்
உள்ளமெலாம் கசியமழை போற்கண்ணி பொழிய
சிறைக்குள்ளே சென்றார்
[குறிப்பு 2]

என்ற ஒரு பாடலில்.


  1. ஈரோட்டுத்தாத்தா-தமிழ்க்காத்த போராட்டம்-17
  2. மேலது-17