பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தமிழகக் குறுநில வேந்தர்


வடநாட்டும் நிஷாதர் எனப்பெயரியார் முற்காலத்தே மரக்கலம் இயக்குதலில் தேர்ந்துளாரென்பது, வால்மீகி ராமாயணத்துங் கண்டது. வேடர் தலைவனாகிய குகனே சீராமமூர்த்திக்குத் தோணி இயக்கினான் என்பதனானே ஈதறியப்படும். இவர் கடலோரத்துள்ள இச்சேது நாட்டிற் குடியேறியதும் இக்கடற் பயிற்சிபற்றியேயாகுமென்பது ஊகித்கறியத்தக்கது.

இம்மறவருள் தொண்டைமான்கிளை யெனச் சிலரை வழங்குவதும் சோழற்கும் இவர்க்குமுள்ள இயைபையே குறிப்பதாகும். நாகப்பட்டினத்திருந்த சோழன் ஒருவன் நாகலோகத்தே சென்று ஓர் நாககன்னியைப் புணர்ந்த காலத்து, அவள் யான்பெற்ற புதல்வனை என்செய்வே னென்ற பொழுது, தொண்டைக் கொடியை அடையாள மாகக் கட்டிக் கடலிலே வரவிட அவன் வந்து கரையேறின் அவர்க்கு யான் அரசுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பேனென்று அவன் கூற, அவளும் புதல்வனை அங்கனம் வரவிட, அவனைத் திரைகொண்டு தந்தமையால் அவனும் அவன்வழியினரும் திரையன், திரையர் எனப்பெயர்பெற்றனரெனவும், அவர் வழியினரெல்லாம் தொண்டையே சூடிப்போந்த காரணத்தால் தொண்டையர் தொண்டைமான்கள் என[1] வழங்கப்பட்டனரெனவும் பெரும் பர்னாற்றுப் படையானும் அதற்கு நச்சினார்க்கினியர் கூறியவுரையானும் அறியப்படுதலால், தொண்டைமான்களும் சோழர்வழித்தோன்றினோராவரென்பதும், சோழ ராலே நாடாட்சி அளிக்கப்பட்டனரென்பதும் தெளியலாகும்.

கலிங்கத்தைவென்ற கருணாகரன் என்பவன் சோழன் படைத்தலைவன் என்பதும் அவன் தொண்டைமான் எனச் சிறப்புப் பெயர்பெற்று விளங்கினன் என்பதும் கலிங்கத்துப்


  1. இக்கதை, எவ்வாறாயினும், சோழற்கும் நாக குலத்தாள் ஒருத்திக்கும் பிறந்தாரே தொண்டையோர், தொண்டைமான்கள் என்பதுமட்டில் நன்குணர்த்தும்.