பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

95


இது ஸேது [1]சடைக்கத் தேவர்காலத்து நிகழ்ந்ததென்பது இதனாற் றுணியலாம். பின் மதுரை நாயகர்கள் கருநாடர்படையெடுப்பிற்கு ஆற்றாதநிலையில் ஸேது வேந்த ருதவிபெற்றுக் கருநாடரை வென்றபோது ஸேது பதிகட்குப் பழைய ஸ்வதந்த்ரமுற்றும் அளித்தனரென்ப. ஸேதுபதியேவலால் நாயகர்க்குத் துணையாய் நின்று கருநாடரை வென்றவன் தெய்வகன்னி யென்னு மந்திரி. இதனானே “ஏலனவாரு கர்த்தாக்கள் மெச்சுஞ் சலியா மதிமந்த்ரி மா தெய்வகன்னி” என்று சிறப்பிக்கப் பெற்றானாவன்.

சேதுபாண்டிய னென்ற பெயர்வழக்கம் இச்சேது காவலர்மரபினர்க்குள் அதிகமாகக் காண்டலானும் சேது பற்றிப் பாண்டியர்க்குள்ள தலைமை நன்றூகிக்கப்படும். இப்பாண்டியரும். இவரோ டொருதன்மையராகிய சேர சோழரும் படைப்புக்காலந்தொட்டே மேம்பட்டுவருத லுடைய பழைய தமிழ்க்குடியினராவர். “வழங்குவ துள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி, பண்பிற் றலைபிரித லின்று” என்னுந் திருக்குறளுரையில் ஆசிரியர் - பரிமேலழகர் பழங்குடி யென்பதற்குத் தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கட்பிறந்தா ரென்றுரைகூறித் தொன்று தொட்டுவருதல்-சேர சோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக்காலந்தொடங்கி மேம்பட்டுவருதல் என விளக்கினார். இதனாலும், வான்மீகிபகவான் சீராமாயணத்து ஸுக்ரீவன் வானரசேனையை நாடவிட்டதருணத்துப் பாண்டியர்செல்வச்சிறப்பையும் அவரது கபாடபுரத்தையும் சேர சோழ ராச்சியங்களையும் எடுத்தோதுதலானும் இவர் பழைமை நன்குணரப்படும்.


  1. சடைக்கத்தேவர் என்பது சடைக்கோத்தேவர் என்பதன் மரூஉ. சடைக்கன் என்பது சடைக்கோன் என் பதன் மரூஉ. இவருக்கே தளவாய் என்றொரு பெயரும் உண்டு.