பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

ஊரும் பேரும்

அருவர்

அருவர் என்பார் மற்றொரு குலத்தார். அவர் வாழ்ந்த நாடு அருவர் நாடு என்று பெயர் பெற்றது. அந்நாடு ஆந்திர நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடை நடுவே அமைந்திருந்தது. அன்னாருடன் பழகிய ஆந்திர நாட்டார் தமிழர் எல்லோரையும் அருவர் என்றே குறித்தார்கள். இதற்குச் சான்று கலிங்கத்துப் பரணியில் உண்டு. குலோத்துங்க மன்னன் ஆணைப்படி ஆந்திர தேசத்திலுள்ள கலிங்க நாட்டின் மீது படையெடுத்த தமிழ்ச் சேனையைக் கண்டபோது,

“ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடநாடர் அருவர் அருவரென அஞ்சி”

ஓடினர் எனப் பரணிக் கவிஞர் பாடியுள்ளார். அருவர் பேசிய தமிழ் மொழியைத் தெலுங்கள் அருவம் என்றார்கள். அதுவே பிற்காலத்தில் அரவம் என்றாயிற்று. அருவர் நாட்டைக் கொடுந்தமிழ் நாடுகளில் ஒன்றாகத் தமிழ் இலக்கண நூலோர் கூறினர். இக்காலத்தில் அருவர் தமிழ்நாட்டிற் காணப்படவில்லை.ஆயினும், திருச்சி நாட்டிலுள்ள அரவக்குறிச்சி என்ற ஊரும், நீலகிரியிலுள்ள அரவங்காடு என்னும் இடமும் அருவரோடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.

மழவர்

மழவர் என்பார் மற்றொரு பழைய குலத்தார் ஆவர். அன்னார் சிறந்த படை வீரர். முடிவேந்தர்களும் அவர் உதவியை நாடினர். அக்குலத்தார்க்கும்,தமிழ் அரச குலத்தர்க்கும், உறவு முறையும் இருந்ததாகத் தெரிகின்றது. தஞ்சை நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று அக்குலத்தார் பெயரைத் தாங்கி நிற்கின்றது.