பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

95

“மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே.”

என்று தேவாரத்திற் பாடப்பெற்ற மழபாடி என்னும் ஊர் மழவரால் உண்டாக்கப்பட்டதாகும். மழவர் பாடி என்பது மழபாடியாயிற்று.

திரையர்

திரையர் என்பார் இன்னொரு பழந்தமிழ் வகுப்பார். திரை கடலின் வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர்.தொண்டை நாட்டை யாண்ட பண்டையரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர் பெற்றான்.காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி அரசாண்ட இளந்திரையனைத் தலைவனாக வைத்து உருத்திரங் கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார்.

இன்னும், தொண்டை நாட்டில் திரையர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் பெயரால் திரையனேரி என்னும் ஊர் உண்டாயிற்று. அதுவே இப்பொழுது செங்கற்பட்டு நாட்டில் தென்னேரியாக விளங்குகின்றது.

முத்தரையர்

முத்தரையர் என்னும் பெயர் வாய்ந்த பண்டைக் குலம் ஒன்று பழந்தமிழ் நூல்களிலே பேசப் படுகின்றது. அவரும் சிறந்த படைவீரராக விளங்கினர். அக்குலத்தைச் சேர்ந்த வள்ளல்களின் பெருமையை நாலடியார் என்னும் பழைய நீதி நூல் பாராட்டுகின்றது. அன்னார் குணநலங்களை வியந்து, “முத்தரையர் கோவை” என்ற நூலும் இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது. சாசனங்களில் சத்துரு பயங்கர முத்தரையன், பெரும் பிடுகு முத்தரையன்